LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூலகங்கள் - Libraries Print Friendly and PDF

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் விருத்தாசலத்ததில் - புலவர் பல்லடம் மாணிக்கம்

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?
 
சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது.  கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது. தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.
 
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார். இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.
 
திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு. தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்..
 
நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர். பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
 
வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும். தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார். பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன.... 
 
எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.
 

தமிழ் நூல் காப்பகம், விருத்தாசலம்

புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலகத்தில், தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் நேயர்களுக்கும் பயன்படக் கூடிய தமிழ்க் கலைக் களஞ்சியங்கள், பல்கலைக்கழகங்களின் வெளியீடுகள், பல்சமய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், இந்திய பேரிதிகாசங்களான வால்மீகி ராமாயணம், மகாபாரதம் மற்றும் கம்பன், இளங்கோவடிகள், பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோரின் படைப்புகள், பல்வேறு பதிப்புகள், ஆய்வு நூல்களின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. 250 ஆண்டுகளுக்கு முன் 1756-ம் ஆண்டு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம், பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பிய முதல் பதிப்பு, பல்வேறு கிடைப்பதற்கரிய பதிப்புகள், கம்பராமாயணத்தின் 10-க்கும் மேற்பட்ட பதிப்புகள் என பல முதல் பதிப்பு நூல்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இங்கு உள்ளன. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கூழங்கை தம்பிரான் எழுதிய நன்னூல் உரையை ஜெர்மனியில் கண்ட தாமோதரன் என்பவர், அந்த நூலை அச்சுப் பிரதிகள் இல்லாத காரணத்தினால் அதை கைப்பட எழுதி வெளியிட்ட புத்தகமும் இந்த காப்பகத்தில் உள்ளது.

நூலக முகவரி

பல்லடம் மாணிக்கம்,

தமிழ்நூல் காப்பகம்,

சேலம் நெடுஞ்சாலை,

விருத்தாசலம் – 606001:

செல்பேசி: 9443042344.

 

பல்லடம் மாணிக்கம் ஐயாவின் தமிழ் வாழ்க்கை

கோவையை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள சிற்றூரில் சாமியப்பா, வள்ளியம்மா ஆகியோரின் மகனாக 23.11.1936 இல் பிறந்தவர். சிற்றூரில் தொடக்கக் கல்வியை முடித்து,பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றவர். புலவர் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1962). ஆயிரம் பூ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர். இந்நூல் பாவேந்தர்,கா.அப்பாத்துரையார் வாழ்த்துப் பெற்ற நூல். சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

1962 முதல் 1975 வரை இத் தமிழாசிரியர் பணி நீடித்தது. 1972 இல் விருத்தாசலத்தில் திலகவதி அம்மாவைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு மக்கட் செல்வங்களைப் பெற்றார். தேவி திரைப்படத்தில் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கில் சிறப்புடையன. இசைமேதை தட்சணாமூர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பாளர். இப்படத்திற்குத் துணை இசையமைப்பாளராக விளங்கியவர் திரு.சேகர்(இசையமைப்பாளர் இரகுமான் அவர்களின் தந்தையார்). டி.எம்.சௌந்தரராசன் பல பாடல்களைப் பாடினார். இப்படத்தில் சோ நடித்துள்ளார். இப்படப் பாடல்கள், இலங்கை, சிங்கப்பூர் வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்படுவது உண்டு. தேவி தேவி உன்னைத்தேடி அலைகிறேன்... தித்திக்கும் முத்தமிழே... என்னும் பாடல்கள் சிறப்புடையன. நடிகர்கள் ம.கோ.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), சிவாசி கணேசன், இயக்குநர் சிறீதர் உள்ளிட்டவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

தமிழாசிரியர் பணியை விடுத்து விருத்தாசலத்தில் செங்கல் சூளை, வேளாண்மைத் தொழிலில் ஈடுப்பட்டவர். படித்த காலத்தில் நல்ல நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அதன் பிறகு தாம் படித்த நூல்களைப் பாதுகாக்கும் எண்ணம் உண்டானது. அதன் பிறகு பலருக்கும் பயன்படப் பாதுகாப்போமே என நினைத்துப் பல நூல்களை வாங்கத் தொடங்கினார். நண்பர்கள் தங்களிடம் உள்ள முதன்மையான நூல்கள், ஆய்வேடுகளை வழங்கினர் இவ்வகையில் இந்த நூலகம் இன்று இலட்சக்கணக்கான அறிவுச் செல்வங்களைத் தாங்கி நிற்கின்றது.

பழமலை நாதரையும் அருள்மிகு கொளஞ்சியப்பரையும் வழிபடச் செல்வோர் தமிழ் நூலகத்தையும் பார்த்து வரலாம்.பேருந்து,தொடர்வண்டி இந்த ஊருக்கு உள்ளது. தொடர்பு முகவரி பல்லடம் மாணிக்கம் அவர்கள் தமிழ்நூல் காப்பகம், சேலம் நெடுஞ்சாலை, தமிழ்நகர்,விருத்தாசலம்-606 001 செல்பேசி: + 91 9443042344 தொலைபேசி : + 91 4143 231611 + 91 4143 230411


நன்றி - http://muelangovan.blogspot.com/


by Swathi   on 04 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.