|
||||||||
காணாமல்போய்க் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செம்பியன் மாதேவியார்! |
||||||||
பிற்காலச் சோழர் வரலாற்றில் மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அரசியாகத் திகழ்ந்தவர் செம்பியன் மாதேவியார். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொற்கூரை வேய்ந்த முதற் பாராந்தக சோழனின் இரண்டாவது மகனும், பேரரசனாய்த் திகழ்ந்த இராசராச சோழனின் பெரிய பாட்டனாரும், சிறந்த சிவநேயச் செல்வருமான கண்டராதித்த சோழரின் மனைவியான இந்தப் பெண்மணி தம் கணவரைப் போலவே சிவபக்தியில் திளைத்தவர். கண்டராதித்தர் சிவனைப் புகழ்ந்து எழுதிய தோத்திரப் பாடலொன்று பன்னிரு திருமுறைத் தொகுப்பில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோனேரிராஜபுரம் என இன்று அழைக்கப்படும் அன்றைய திருநல்லத்தில் உள்ள திருக்கோயிலைத் தம் கணவர் பெயரால் ’கண்டராதித்தம்’ என்ற கற்றளியாகப் புதுப்பித்து தம் கணவர் சிவபெருமானைத் திருவடி தொழுகின்றதாக ஒரு படிமம் செய்து அக் கோயிலில் வைத்தார் செம்பியன் மாதேவியார். இதுபோன்று பல கோயில்களை அவர் எழுப்பினார்; பலவற்றைப் புதுப்பித்தார்; பல கோயில்களுக்குத் திருமேனிகள், அணிகலன்கள் ஆகியவற்றைக் கொடுத்தார்; பலகோயில்களுக்கு விளக்குகள் வைத்தார். இவர் செய்த கோயில் திருப்பணிகளில் தனிச்சிறப்பான முறையொன்றைக் காண்கிறோம். ஒரு கோயிலைப் புதுப்பிக்குமுன்பு அக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டுச் சாசனங்கள் அனைத்துக்கும் புதிய படி ஒன்று எடுத்து அமைப்பது (making a new copy of the inscriptions) இவர் வழக்கம். இவ்வாறு இருபத்தாறு சாசனங்களுக்குப் படி எடுத்துள்ளார். இவர் படியெடுத்த கல்வெட்டுகளில் ‘ஸ்வஸ்தி ஸ்ரீ; இதுவும் ஒரு பழங்கற்படி’ என்னும் சொற்கள் சேர்க்கப்பட்டிருத்தல் இதற்குச் சான்றாய்த் திகழ்கின்றன என்கிறார் டாக்டர் கே. கே. பிள்ளை அவர்கள். இவ்வாறு சிவபக்தியிலும், சிவத்தொண்டிலும் பெரிதும் ஈடுபட்ட காரணத்தினால் இவ்வம்மையார் `மாதேவடிகள்` எனும் சிறப்புப்பெயர் பெற்றார். மாதேவடிகளுக்குக் கோனேரிராஜபுரம் கோயிலில், இவருடைய மகனான, உத்தம சோழனால் வைக்கப்பட்டிருந்த மூன்றரை அடி உயரமுள்ள இந்தச் சிலைதான் (படத்தில் காண்க) கோயில் நிர்வாகிகளால் அகற்றப்பட்டுக் கடத்தல் கும்பலின் கைகளுக்குப் போயிருக்கின்றது. பின்னர், பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது(!!). இவ்வளவுகாலம் எங்கே போனது…என்ன ஆனது என்றே தெரியாமலிருந்த இந்தச் சிலை, பல்வேறு தொடர் முயற்சிகளால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள பிரியர் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது (Freer Gallery of Art, Washington D.C.). அதனை மீட்க இப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன!! கடவுளர் சிலைகள் தொடங்கிக் கடவுள் அடியார்கள் சிலைவரை அனைத்தையும் அருள்வேண்டி நோக்கிய நிலைமாறி, அவற்றைப் பொருளுக்காக நோக்கி, விற்றுப் பணமாக்கும் ’உயர்ந்த பண்பாடு’ நம் மக்களிடம் வந்து பல பத்தாண்டுகள் கடந்துவிட்டதன் மறுக்கமுடியாத சாட்சி இது!
-மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா, அமெரிக்கா |
||||||||
by Swathi on 24 Sep 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|