கத்தி படத்தை தொடர்ந்து, விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் புலி. தமிழ் சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது இந்த படம்.
புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ,
இங்லீஷ் விங்லீஷ் படத்திற்கு பிறகு, ஸ்ரீ தேவி புலி படத்தில் நடித்திருக்கிறார். காரணம் என்னவென்று விசாரித்ததற்கு அவர் கேட்ட கதைகள் எதிலுமே ஈடுபாடு இல்லாமல் போனதுதானாம். பிறகு சிம்புதேவன் புலி படக் கதையைக் சொன்னதுமே ஓகே சொல்லிவிட்டாராம் ஸ்ரீதேவி. அதுமட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழியிலும் அவரே சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
ஒரு கன்னியும் மூணு களவானியும் படத்திற்கு முன்னரே புலி படக் கதையை ரெடி செய்துவிட்டார் சிம்புதேவன். கதையை எழுதும் போதே விஜய்யை மனதில் வைத்தே உருவாக்கியிருக்கிறார். நான்கு வருடமாகவே கலை இயக்குநர் முத்துராஜுடன் புலி படத்திற்கான சந்திப்பில் இருந்திருகிறார்.
படப்பிடிப்பின் போது அங்கு பணியாற்றியவர்களுக்கே சில காட்சிகள் ஏன் எடுக்கிறார்கள் என்று குழப்பத்திலேயே இருந்தார்களாம். படம் முடிந்து திரையில் பார்க்கும் போது பிரம்மிப்பின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார்கள்.
விஜய் கால்ஷீட் கிடைக்கவே தாமதமாகியிருக்கிறது இல்லையெனில் பாகுபலி வெளியாகும் முன்பே புலி வெளியாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதுவரை தயாரான படங்களில் பாகுபாலியில் தான் அதிகமான கிராபிக்ஸ் ஷாட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1400 ஷாட்கள். அதற்கு முன்பு நான் ஈ படத்தில் பயன்படுத்தப்பட்ட 1200 ஷாட்டுகளே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் தற்போது புலி படத்தில் 2400 ஷாட்டுகள் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
ராணியாக ஸ்ரீதேவி, இளவரசியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். ஹன்சிகாவிற்கு மேக்கப் போட மட்டும் 3 மணிநேரம் எடுக்குமாம். 9 மணி ஷூட்டிங்கிற்கு 6 மணிக்கே வந்து மேக்கப் போட ஆரம்பித்துவிடுவாராம் ஹன்சிகா.
பாகுலியுடன் புலியை ஒப்பிடாதீர்கள். பாகுபலி போர் சார்ந்த கதைத் தளம். ஆனால் புலி படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த பேண்டசி படம் என்று முன்னரே கூறிவிட்டார் இயக்குநர் சிம்புதேவன்.
விஜய்யிடம் சிம்புதேவன் கதை சொன்ன உடனே விஜய்க்கு கதை பிடித்துவிட்டதாம். எந்த மாற்றமும் வேண்டாம் அப்படியே படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்றிருக்கிறார் விஜய். ஷூட்டிங் நேரத்தில் அடுத்த நாள் எடுக்கவிருக்கும் காட்சிகளின் வசனத்தை முன் தின இரவே மனப்பாடம் செய்துவிடுவாராம் விஜய். இப்படத்திற்காக பிரத்யேக வாள் பயிற்சியும் எடுத்திருக்கிறார்.
படத்திற்கான செட் சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் அமைத்திருக்கிறார்கள். படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஜிங்கிலியா பாடலே ஒரு சான்று. அதுபோல பல வித்தியாசமான செட்டுகள் மற்றும் வித்தியாசமான காட்சிகள் தமிழுக்கு புதுவரவு என்கிறது படக்குழு.
விஜய் தான் நடிக்கும் படத்தில் ஒரு பாடலாவது பாடிவிடுவார். இப்படத்தில் ஏண்டி ஏண்டி பாடலை ஸ்ருதியுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் காட்சிகள் கேரளாவிலும், தாய்லாந்திலும் படமாக்கியிருக்கிறார்கள்.
புலி படத்தில் விஜய் காட்டூநிஸ்டாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. கதைப்படி சரித்திர காலகட்டத்தை மனதில் கொண்டு சில கதாபாத்திரங்களை கார்ட்டூனில் வரைவாராம் விஜய். ஆனால் அவை ஒரு கட்டத்தில் நிஜமாலுமே உயிர்பெற்று விடுமாம். அந்த கார்ட்டூன்கள் விஜய்யை அந்த சரித்திர காலத்திற்குள் இழுத்து சென்று விடுவதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.
புலி படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உலகமெங்கும் 3000 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
|