ஐ படத்தை தொடர்ந்து ஷங்கர் யாரை இயக்கப் போகிறார் என்பது தான் ரசிகர்களின் அனேக எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஷங்கர் அடுத்து இயக்கப் போகும் படத்தில் ரஜினியுடன் ஆமீர்கானும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் தான் இயக்குவார் என பரவலாக செய்திகள் வெளியாகின.
ரஜினியும் ஷங்கரும் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்துப் பேசினர். இது அடுத்த படத்துக்கான சந்திப்புதான் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் தீவிரமாக உள்ளார். இதில் முதலில் ரஜினி நடிப்பார் என்று சொல்லப்பட்டது. பின்னர் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தான் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது.
இப்போது ரஜினியும் ஆமீர்கானும் இணைந்து இந்தப் படத்தில் நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியும், அமீர்கானும் இணையும் பட்சத்தில் படத்தின் பட்ஜெட் 200 கோடியைத் தாண்டினாலும் கவலைப்படத் தேவையில்லை. படத்துக்கு உலக அளவில் பெரும் வசூலும் குவியும் என்பதால், இருவரையும் இணைப்பதில் ஷங்கர் தீவிரம் காட்டுகிறாராம்.
எந்திரன் 2-ம் பாகத்தில் நிறைய கிராபிக்ஸ் மற்றும் அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் உள்ளதால், பணம் ஏராளம் தேவைப்படும். எனவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு செலவழித்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறாராம் ஷங்கர். விரைவில் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
|