LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

 

அளப்பரிய சேவைக்காக ‘பாரத ரத்னா’ பெறும் தலைவர்கள் பற்றிய விவரம்: 

 

விவசாயிகள் தலைவர் சரண்சிங்

 

கடந்த 1902-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டம், நூர்பூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் சவுத்ரி சரண்சிங் பிறந்தார். சட்டம் பயின்ற அவர் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறை சென்றார். சுதந்திரப் போராட்டக் காலம் முதல் காங்கிரஸில் இருந்த சரண் சிங் கடந்த 1967-ம் ஆண்டு பாரதியக் கிரந்தி தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் 1977 முதல் 1979 வரை ஜனதா தளத்திலும், கடந்த 1979 முதல் 1980 வரை மதச்சார்பற்ற ஜனதா தளத்திலும் இருந்தார். நாட்டின் 5-வது பிரதமராகப் பதவி வகித்தார். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருமுறை பதவி வகித்தார். மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் சரண் சிங் பணியாற்றி உள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தினார். இதன்காரணமாக இன்றுவரை உத்தரப் பிரதேச விவசாயிகளின் தன்னிகரற்ற தலைவராக அவர் போற்றப்படுகிறார். 

 

பொருளாதாரத்தை நிமிர்த்தியவர் நரசிம்ம ராவ்

 

கடந்த 1921-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திராவின் வாரங்கல் மாவட்டம், லக்னேபள்ளி கிராமத்தில் நரசிம்ம ராவ் பிறந்தார். சட்டம் பயின்ற அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். கடந்த 1971-ம் ஆண்டில் ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். மத்திய உள்துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார். கடந்த 1991 முதல் 1996 வரை நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது உலக பொருளாதாரத்துக்காக இந்தியாவின் வாயில்களைத் திறந்துவிட்டார். இதன்மூலம் கூன் விழுந்த இந்தியப் பொருளாதாரத்தைத் தலைநிமிர்த்தினார். இஸ்ரேல் நாட்டுடன் உறவைத் தொடங்கினார். கிழக்கு ஆசிய வெளியுறவுக் கொள்கைக்கு முன்னுரிமை அளித்தார். இந்தியாவின் அணு சக்தி திட்டங்களைப் புதுப்பித்தார். பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்கினார். நரசிம்ம ராவுக்கு 17 மொழிகள் தெரியும். நேரு குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் பிரதமராக 5 ஆண்டுகள் முழுமையாகப் பதவி வகித்தவர் ஆவார். 

 

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன்

 

கடந்த 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்தார். அவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். இரண்டாம் உலகப்போரின்போது நாடு முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது மனம் வருந்திய சுவாமிநாதன், இந்தியாவுக்குப் போதுமான உணவுத் தானியம் கிடைப்பதை உறுதி செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் தனது வாழ்க்கையை வேளாண் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். மெட்ராஸ் வேளாண்மை கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியானார். 

 

பின்னர் ஐபிஎஸ் பணியைத் துறந்து வேளாண் ஆராய்ச்சி படிப்புக்காக நெதர்லாந்து சென்றார். கடந்த 1954-ல் இந்தியாவுக்குத் திரும்பி இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டார். இந்தியாவில் முதல்முறையாக வீரிய ரக கோதுமையை உருவாக்கினார். இதன்மூலம் இந்தியாவின் கோதுமை உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று சுவாமிநாதன் அழைக்கப்படுகிறார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், உலக உணவு பரிசு, ரமோன் மகசேசே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

by Kumar   on 09 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.