நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. பங்காரு அடிகளார், சின்னப்பிள்ளை, பிரபுதேவா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளத்தைச் சேர்ந்த நடிகர் மோகன் லால், விண்வெளித் துறை விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக பத்ம பூஷண் விருது கிடைத்து உள்ளது. விளையாட்டுத் துறையில் உத்தரகாண்டைச் சேர்ந்த பச்சேந்திரி பால், பத்ம பூஷண் விருது பெற்று உள்ளார். தமிழகத்தில் ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், அறுவைச் சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, கண் மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.வி. ரமணி, இசைக் கலைஞர் "டிரம்ஸ்' சிவமணி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், நடிகர் பிரபுதேவா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோருக்கும் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், பிரபல கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்ம விருது பெறுபவர்களில் 21 பேர் பெண்கள், 11 பேர் வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், ஒருவர் திருநங்கை ஆவர். 3 பேருக்கு மரணத்துக்குப் பிந்தையதாக விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கவுரவிப்பது வழக்கத்தில் உள்ளது.
|