தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுவில், சொத்து மற்றும் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை மறைத்தால், அவர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்கும் அதிகாரம், தேர்தல் அதிகாரிக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு, உச்ச நீதி மன்றத்தில் சில தன்னார்வு அமைப்புகள் மூலம், பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனுவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் தேர்தல் செலவு கணக்கு, சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி குறித்த தகவல்கள் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் எனவும், அப்படி குறிப்பிடாத பட்சத்தில், அல்லது தவறாக குறிப்பிடாலோ, அவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்கும் அதிகாரத்தை தேர்தல் அதிகாரிக்கு வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாக்காளர்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளைப் பற்றிய தகவல்கள் அவர்களுக்கு தெரிய வேண்டும். இது, அவர்களின் உரிமை. தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது அல்லது தவறாக குறிப்பிடுவது, குற்றப் பின்னணி குறித்த தகவல்களை மறைப்பது, சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் இருப்பது ஆகியவை, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்.எனவே, இதுகுறித்த தகவல்களை தெரிவிக்காத அல்லது மறைப்போரின் வேட்பு மனுக்களை நிராகரிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு உண்டு என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
|