|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : நீராடல் (குளியல்) – 13 |
||||||||
நீராடல் (குளியல்) அன்றாடச் செயல்களாலும் உடற்பயிற்சியாலும் உடல் வெப்பத்தினாலும் தோன்றும் வியர்வையும் அழுக்கும் உடல் முழுவதும் உள்ள முடியின் வேர்ப்பகுதியில் தங்கும். இவற்றை முழுமையாக நீக்குவதற்காக தினமும் நீராடல் அவசியம். அன்றாடம் உச்சி முதல் உள்ளங்கால் வரை நீர் முழுவதும் நனைந்து ஊறி மாசுகள் முற்றிலும் நீங்குமாறு நீராடல் வேண்டும். மாசுக்கள் முழுமையாக நீங்காவிட்டால் முடியின் வேர்ப்பகுதி அடைபட்டு உடற்கழிவுகள் வெளியேறாது. இவை இரத்தத்தில் மீண்டும் கலந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சித்தர்களின் வழியை பின்பற்றிய தமிழர்கள் அன்றாடம் சூரிய உதயத்திற்கு முன்பாகவே குளிக்கும் பழக்கத்தைப் பின்பற்றினர். இதனை கீழ்கண்ட சித்தர் பாடலால் நாம் உணரலாம்.
“காலைக் குளித்தல் கடும்பசி நோயும் போம்
மாலைக் குளிக்க இவை மத்திமமே – சோலையுடை
வாசநீர் சுத்த சலம் வன்னி நீராடுங்கால்
தேசமுடற் பேத முன்னிச் செப்பு”
காலையிலும் மதியமும் கடும் வேலையில் ஈடுபடுவோர் மாலையிலும் குளித்தல் வேண்டும். அக் காலத்தில் ஆறு, ஏரி அல்லது நீர் போக்கு வரத்து உள்ள நீர் நிலைகளில் மக்கள் குளித்து வந்தனர். இது இப்போது கிராமப்புறங்களில் ஆற்றோரம் வாழும் நகரப்புறங்களில் மட்டுமே சாத்தியப்படும். மூழ்கிக் குளிப்பதால் மட்டுமே உடலில் உள்ள வளி, அழல், ஐயம் என்கிற உயிராற்றல்கள் இயல்பு நிலையினை அடையும் என சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அருவியில் குளிப்பதாலும் இதே நன்மைகள் கிடைக்கும். இதனை “ காந்தி பலம் பசியுங் கட்டழகு முண்டாகும் “ என சித்தர் பாடல் கூறுகின்றது. அதிகாலையில் மேற்கூறியவாறு குளிப்பதால் உடல் அழகு கூடும். வலிமை கூடும். பசியுண்டாகும்.
இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் எட்டடிக்கு எட்டடி சதுரமாகவும் மூன்றடி ஆழமுள்ள தொட்டியில் நீர் நிரப்பிக் குளிப்பதால் மேற்கண்ட நன்மையுண்டாகும். இதனை
“ ஏறு மடி வெட்டகத்துத் தற்சதுர மேற்ற மூன்று
இதுப மோர் மட்டடகத்துத் தொட்டிவரை வார் “
எனும் பாடலால் நாம் அறிய முடியும்.
குளிக்கும் விதி
இது போன்ற தொட்டியில் குளிக்க இயலாதவர்கள் மண் பாண்டத்தில் நீர் நிரப்பி இரவு முழுவதும் வைத்திருந்து உடல் முழுவதும் நன்றாக நனையும்படி ஊறவிட்டு பொறுமையாகக் குளித்தல் வேண்டும். தினமும் உச்சியில் நீர் விட்டுத்தான் குளிக்க வேண்டும். கழுத்திற்கு கீழ் குளித்தல் கூடவே கூடாது.
அவ்விதம் குளிக்கும் போது உடலின் ஒன்பது வாயில்களிலும் நீர் நிறைந்து அவற்றைக் குளிர்விக்க வேண்டும். கண்களில் 2 – 3 துளிகள் விட்டுத் தூய்மைப்படுத்த வேண்டும். தலையைச் சாய்த்து காதில் நீரினை விடல் வேண்டும். பின்பு தலையை நிமிர்த்தி நீரினை வெளியேற்ற வேண்டும். வெளியேறும் நீர் சூடாக வெளியேறும். மீண்டும் மீண்டும் இவ்விதம் செய்வதால் வெளியேறும் நீர் சூடு இல்லாமல் வெளியேறும். அப்போது உடலின் வெப்பம் இயல்பு நிலையை அடைந்து விட்டதாகக் கருத வேண்டும். இது போன்று ஒவ்வொரு துவாரமாகத் தூய்மைப் படுத்த வேண்டும். இது தான் சித்தர்கள் கூறும் விதி. நான் கூறுவது என்னவெனில் இது போன்று தினமும் செய்ய இயலவில்லை எனில் வாரத்திற்கு இரண்டு முறையாவது இதுபோல் செய்வதால் உடல் இயக்கம் சீராகி உடல் வலிமையடையும்.
குளிக்கும்போது உடலைத் தூய்மைப் படுத்த
உடலைத் தூய்மைப்படுத்த பெருவாரியானவர்கள் பயன்படுத்துவது சவுக்காரக்கட்டி என்று தமிழில் அழைக்கப்படும் சோப் என்ற வேதிப்பொருளைத்தான். சோப்பில் ஏராளமான உடலிற்கு ஒத்துக்கொள்ளாத வேதிப் பொருட்கள் உள்ளன. அவற்றில் பல வேதிப் பொருட்கள் புற்றுநோயினை உண்டாக்குவன. மேலும் உறுப்புகளுக்கு நச்சாகும் நாளமில்லாச் சுரப்பிகளை ( Hormones ) வெகுவாகப் பாதிக்கின்றன. Ace sulfame K, Acetone, Acetaldehyde, Acrylamide, Alcohol, Alpha Hydroxy Acid, Benzoic Acid, Benzoiyl Peroxide, Coal Tar Dyes, Coumarin, Elastin, Fluoride, Famaldehyde, Genetically modified organism, Hydroquinone, Laxolin, Nitrosamines, Paraffin, Poly propylene, Potassium Bromate, Poly vinyl chloride (PVC), Sodium Lauryl Sulphate, Talc, Triclosan, Vinyl chloride போன்ற வேதிப்பொருட்கள் சோப்பில் கலக்கப்படும் நச்சுப் பொருட்களாகும். இவற்றால் உடலுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் ஏராளம்.
உலகில் கிட்டத்தட்ட 2000 வகையான சோப்புகளில் இந்த கேடு விளைவிக்கும் பொருட்களே கலந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நுண்ணுயிர்களுக்கு எதிராக சோப்புகள் செயல்படுவதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. உடலின் மேற்பரப்பிலும் மறைவிடங்களிலும் பல நன்மை விளைவிக்கும் நுண்ணுயிர்கள் ( Bacterias ) உள்ளன. இவை உடலிற்கு வெளிப்புறமிருந்து உடலைத்தாக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும். அந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு எதிராக சோப்புகள் செயல்படுவதால் மறைவிடங்களில் கட்டிகள், படை, அரிப்பு (Fungal and Protozoal infections of skin ) போன்றவை ஏற்படும். குறிப்பாகப் பெண்களுக்கு வெள்ளை படுதல் ( White discharge ) ஏற்படுவதற்கு இந்த நுண்ணயிர் எதிர் சோப்புகளே ( Anti Bacterial Soaps ) பெரும்பாலும் காரணமாகின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சோப்புகள் சுற்றப்புறச் சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கின்றன.
சோப்புகளுக்குப் பதிலாக நாம் எதனைப் பயன்படுத்துவது ?
உடலைத் தூய்மைப்படுத்து வதற்கு ஏராளமான மூலிகைப் பொடிகளை சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
பாசிப்பயிறு, கடலை மாவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மூலிகைப் பொடிகளை நாம் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். நலுங்கு மாவு, பஞ்ச கல்பக் குளியல் பொடி போன்றவை இப்போது சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை நாம் குளியலுக்காகப் பயன்படுத்தலாம்.
பஞ்சகல்பப் பொடி
கத்தூரி மஞ்சள், மிளகு, வேப்பம் வித்து, கடுக்காய்த் தோல், நெல்லிப் பருப்பு இவற்றை சம அளவு கலந்து பசுவின் பால் விட்டு அரைத்து சிறிது சூடு செய்து இளம் சூட்டுடன் உச்சியிலும் உடலிலும் பூசி சிறிது ஊறவிட்டு குளித்து வந்தால் எந்த நோயும் உடலை நெருங்காது என சித்தர்கள் கூறுகின்றனர். மன அமைதி ஏற்பட்டுத் தெளிவான அறிவும் உண்டாகும். இதனை வாரம் ஒருமுறையாவது பயன்படுத்தி நாம் பலனடைய வேண்டும். அனேக நற்பலன்களை உடலுக்கு அளிக்கும். குறிப்பாக யோகப்பயிற்சியின் போது உடலில் ஏற்படும் வெப்ப மாறுபாட்டினை ஒழுங்குபடுத்தும்.
தினமும் பயன்படுத்தும் மூலிகைக் குளியல் பொடி
பாசிப்பயிறு மாவினை அடிப்படைப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் எராளமான குளியல் பொடிகள் உள்ளன. அவற்றில் கலக்கப்படும் முக்கிய மூலிகைகள் கிச்சிலிக் கிழங்கு, கார்போகரிசி, அகில்கட்டை, சந்தனம், தேவதாரு, கிளியூரல் பட்டை, நீரடிமுத்து, வெட்டிவேர், கத்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு, பளிங்குச் சாம்பிராணி, துளசி, திருநீற்றுப்பச்சிலை போன்றவைகளாகும். இவற்றை முழுவதும் அரைத்தும் பாசிப்பயிறுடன் கலந்து பயன்படுத்தலாம் அல்லது ஏதேனும் சிலவற்றை மட்டும் கலக்கலாம். தனி பாசிப்பயிறு மட்டுமே உடலில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம். மூலிகைகள் கலந்து குளிப்பதால் உடலில் தோல் பிரச்சனைகள் ஏற்படாது. உடலிற்கும் உள்ளத்திற்கும் வலிமையை ஏற்படுத்தும்.
தினமும் மூலிகைப் பொடியால் குளிப்பதால் ஏற்படும் சில நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
1. தோல் மற்றும் தசையில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்துகின்றது. இதனால் அவற்றின் சுருங்கி விரியும் தன்மையும் வளையும் தன்மையும் மேம்படுகின்றது.
2. இரத்த ஓட்டத்தினை சீர்படுத்துவதால் அதி இரத்த அழுத்தம் ( High Blood Pressure ) குறைந்து இயல்பு நிலையை அடைந்து இதய இயக்கம் சீராகின்றது.
3. குளிர்ந்த நீரில் தினமும் குளிப்பதால் இரத்த ஓட்டத்துடன் நிணநீர் ஓட்டமும் ( Lymph System ) சீராவதால் நோய் எதிர்ப்பாற்றல் மேம்படும்.
4. மன அழுத்தம், மனப்பதட்டம், விரக்தி மனப்பான்மை நீங்குகிறது.
5. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப் பெருக்க உறுப்பு மண்டலத்தைச் சீர் செய்கிறது. குளிர்நீர்க் குளியலால் விந்தணுக்கள் எண்ணிக்கை உயர்வதும் பெண்களுக்குப் பூப்பு சுழற்சி சீராவதும் ஆய்வுகளின் மூலம் உறுதி படுத்தப் பட்டுள்ளது. இருவருக்கும் குழந்தைப் பேறு ஏற்படுத்தும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்.
6. குளிர்நீரில் தொடர்ச்சியாகக் குளிப்பதால் இரைப்பு இருமல் ( Bronchial Asthma ), பீனிசம் ( Sinusitis ) போன்ற மூச்சுப்பாதை நோய்கள் சரியாகின்றன. நுரையீரல் இயக்கம் சிறப்பாக சீர்படுத்தப் படுகின்றது.
7. குளிர்நீரில் மூழ்கியோ உடல்முழுவதும் குளிரும்படியாகவோ குளிப்பதால் சர்க்கரை நோயர்களில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
8. உடலின் நச்சுக்கள் முழுமையாக நீக்கப் படுகின்றது.
9. இரவு இயல்பான, அமைதியான, ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகின்றது.
10. உடல் அழகு மேம்படுகின்றது.
11. பசி ஆர்வம் அதிகமாகின்றது. குளிர் நீர் குளியல் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் சீராக நடக்க உதவுகின்றது.
12. தோல், முடி நலம் பேணப்படுகின்றது.
13. மூளை நரம்பு மண்டலம் பலப்படுகின்றது. ஞாபக ஆற்றலும் புத்திக் கூர்மையும் ஏற்படுகின்றது. மாணவர்களின் கற்கும் திறன் மேம்படும். இளைஞர்களின் செயலாற்றல் உயர்கிறது.
நாள் முழுவதும் நாம் சிறப்பாகச் செயல்பட சித்தர்கள் கூறியபடியான குளியல் வழிவகை செய்கின்றது.
வேதியியல் குளியலிலிருந்து விடுபட்டு மூலிகைக் குளியலுக்கு மாறுவோம்.
நலப்பயணம் தொடரும்................. |
||||||||
by Swathi on 08 Dec 2014 3 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam சித்த மருத்துவம் நீராடல் குளியல் How to Take a Bath Kuliyal Podi Preparation in Tamil Herbal Kuliyal Powder | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|