உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
உலகின் மிக உயரமான முருகப் பெருமானின் திருவுருவச்சிலை மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலாம்பூர் அருகே பத்துமலை குகைக் கோயிலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. 140அடி உயரம் கொண்ட முருகப்பெருமானின் இந்த திருவுருவச்சிலையை வழிபட பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். புகழ்பெற்ற இச்சிலையை வடிவமைத்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் ஆவர்.
இந்நிலையில் இக்குழுவினரே சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில், சேலம்-சென்னை நெடுஞ்சாலையை ஒட்டி 146 அடியில் முருகனின் திருவுருவச்சிலையை வடிவமைத்துள்ளனர். மலேசிய நாட்டின் சிலையை விட 6 அடி அதிகம் கொண்ட இச்சிலையே இனி உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் மாதத்தில் இச்சிலைக்குக் குடமுழுக்கு நடத்தக் கோயில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
|