உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நேற்று சில திருத்தங்களுடன் நிறைவேறியது.
மக்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி விவாதத்தை தொடக்கி வைத்தார், அதில் கூறியதாவது, நாட்டில் பசியையும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையையும் விரட்டுவதுதான் இந்த மசோதாவின் நோக்கம். கட்சி வேறுபாடு இன்றி அனைவருமே உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்க வேண்டும். இது இந்தியாவின் செயல்திறனை உணர்த்தும் மசோதா. அனைத்து இந்தியர்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பை நாடு ஏற்றுக் கொண்டுள்ளது என்ற மிகப்பெரிய செய்தியை அனைவருக்கும் தெரிவிக்க இதுவே சரியான தருணம் என்றார். உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளை நிராகரித்துப் பேசிய சோனியா காந்தி, "இத்திட்டத்தை நிறைவேற்ற நம்மிடம் போதுமான வளங்கள் உள்ளனவா? இது விவசாயிகளுக்கு பலனளிக்குமா? இல்லையா? என்பது இப்போது கேள்வியல்ல. திட்டம் முறையாக நிறைவேற்றப்படத் தேவையான அனைத்தையும் நாம் செய்வோம். விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது' என்றார்.காங்கிரஸ் அரசு, முன்பே தகவல் பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை, வேலை பெறும் உரிமை, வனப் பாதுகாப்பு உரிமை என பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அந்த வரிசையில் இப்போது உணவு கிடைப்பதை உறுதி செய்ய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று சோனியா காந்தி மக்களவையில் பேசினார்.
இதனை அடுத்து பேசிய, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது, தேர்தல் நோக்கத்துடன் உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என முலாயம் சிங் குற்றம்சாட்டினார். இந்த மசோதா விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும். எனெனில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து தானியங்களும் அரசால் வாங்கிக் கொள்ளப்படும் என்று எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. இப்போது இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதுதான் முக்கியக் காரணம். முன்பு பசியால் ஏழைகள் உயிரிழந்தபோது இந்த மசோதாவைக் கொண்டு வராதது ஏன்? ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளைக் கவர ஏதாவது திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஆனால் எதுவும் ஏழைகளுக்கானதாக இல்லை.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சமாஜவாதி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மசோதாவில் அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்த திருத்தங்களை ஏற்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தது. இதில், அரசுக்கு ஆதரவாக 239 ஓட்டுகளும், எதிராக 172 ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து மசோதாவில் திருத்தங்களை கொண்டுவர கோரிய எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மசோதாவை ஏற்பது தொடர்பாக குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அரசுக்கு வெற்றி கிடைத்தது. இதையடுத்து, லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா திருத்தங்களுடன் நிறைவேறியது.
|