LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

குறளின் கண்கள் - பூவை அமுதன். கலை அமுதம் பதிப்பகம்

"குறளின் கண்கள்"
பூவை அமுதன். கலை அமுதம் பதிப்பகம் முதல் பதிப்பு 1999 மொத்த பக்கங்கள் 120.விலை ₹ 25/
இது ஒரு திருக்குறள் விளக்க புத்தகம் என்று சொல்லலாம் .
கண்கள் குறித்து இருக்கிறது .கண் என்ற எழுத்து வார்த்தை எங்கு வருகிறதோ ,அது குறித்த விவரமான பதிவு .
திருக்குறளில் கண்குறித்து எழுதப்பட்ட, 73 திருக்குறளின், 73 பொருள் குறித்த விளக்கம் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது.
**
உலகப் பொதுமறையாக விளங்கும் திருக் குறளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள், கருத்து விளக்க நூல்கள் எனப் பல நூல்கள் வெளி வந்துள்ளன.
இந்நூல் திருக்குறளில் காணப்பெறும் கண்கள் குறித்து விளக்குவதாக அமைந்து, கருத்துக்கு விருந்தளிக்கும் வகையில் கவினுற வெளிவருகிறது.
ஒப்பற்ற வாழ்வியல் நூலை வடித்து வையப் பெரும் புகழோடு வானோங்கி வளர்ந்திருக்கும் வள்ளுவப் பெருந்தகையை வணங்கி அவர் வகுத்த வழியில் வாழ்ந்து வளம் பெறுவோமாக!
**
ஆசிரியர் குறிப்பு.
ஆசிரியர் எழுதிய புத்தகங்கள்.
பூவை அமுதன்
(சி.ர. கோவிந்தராசன் எம்.ஏ.,பி.டி.)
கவிதை நூல்கள்
1. அழகுமலர் (அரசுதாசன்)
கவிதைத் தொகுப்பு ..
2. உள்ளக்கடலின் உணர்வலைகள்
3. பூவை அமுதன் கவிதைகள்
4. கவிமுரசு
5. புலரும் பொழுது
6. உயிர்உறவு (எய்ட்ஸ் விழிப்புணர்வுக் காப்பியம்)
சிறுவர் கவிதை நூல்கள் .
1. அறிவுவிருந்து
2. ஆடிடுவோம், பாடிடுவோம்
3. சிறுவர் பாடல்கள்
4. நிலாப் படகு
5. நல்ல நல்ல பாடல்கள்
பரிசு பெற்ற நூல்கள்
1. நமது உள்ளம்-உளவியல் - தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசு... 1970
2. பல்லவ நாட்டுச் சிறுவர்கள் -சிறுவர் நாவல் -கோவை எல்லப்ப ரெங்கம்மாள் அறக்கட்டளைப் பரிசு
1994
3. முத்து நம் சொத்து - சிறுவர் நாவல் அனந்தாச்சாரி அறக்கட்டளைப் பரிசு .... 1995
4. கிராமத்துப் பையன் - சிறுவர் நாடகம் - ஏவி எம் அறக்கட்டளைப் பரிசு.1995
5. உயிர் உறவு - காப்பியம் திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு
விருதுகள்
பாரதி பணிச் செல்வர்.1999
அ.இ.த. எழுத்தாளர்கள் சங்கம்.
திருக்குறள் உரைச் செம்மல் உலகத் திருக்குறள் மையம்.
குழந்தை இலக்கிய மாமணி குழந்தை எழுத்தாளர் சங்கம். வள்ளியப்பா இலக்கிய விருது -கோவை வள்ளிப்பா இலக்கிய வட்டம்.
***
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உள்ளத் தில் எழும் உணர்ச்சிகளைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் கண்ணாடியே முகம்.
முகத்தில் அமைந்துள்ள கண்களே அகத்தில் நிகழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
இத்தகைய கண்கள் குறித்து வள்ளுவப் பெருந்தகை தம் திருக்குறளில் விளக்கமாகக் கூறிச் செல்கிறார்.
குறளின் கண்களைக் கூறுவதே குறிக்கோளாகக் கொண்டது இந்நூல்.
வள்ளுவம் வழங்கியுள்ள கண்கள் நம் உள்ளத்துக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளன.
திருக்குறள் எண்கள் 392 393 566,571 572 ,573, 574 575 41 577 576, 578 579 580,581,585,705,709,710,726,775,780,
1061,1084,983,1085,1086,1091,1092,
1095,1100,1112,1114,119,1125,1126
,11271136,1140,11421170,1171,1172,
1174,1175,1176,1177,1178,1179,1180,
1198,1210,1212,1221,1231,1232,
12391240,,1244,1252,1261,1265,1267,
1271,1272,1280,1283,,1285,1290,1305,
1311,1315.
ஆகமத்தும் 73 திருக்குறளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது கண் என்ற ஒரு பொருள் குறித்தே.
ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
1).கண்ணோட்டத்து உள்ளது...
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உதவி வாழக் காண்கின்றோம். இனத்தைக் காக்கும் தன்மையில் காகம் நம் கண்களுக்குச் சாகாச் சான்றாக நிற்கின்றது.
உலக அமைப்பே ஒன்றுக் கொன்று உதவி வாழும் வகையில்தான் படைக்கப்பட்டுள்ளது. பூமி வானத்துக்கு நீரைத் தருகிறது. வானம் பூமிக்கு நீரைத் தருகிறது. மண் பரப்பில் உள்ள மாக்கடல் நீரைக் கதிரவன் கொண்டு விண்ணளாவச் சேர்க்கிறான். தண்காற்று தீண்டியதும் விண்ணகத் தாய் மண்ணகத்துக்கு மழையாக மீண்டும் அனுப்பிச் சேர்க்கிறாள்.
பசுவுக்குப் புல் கொடுத்து நாம் காப்பற்றுகிறோம் என்றால் அது பால் கொடுத்து நம்மைக் காப்பாற்று கிறது. இவ்வாறு நெடுக எடுத்துச் சொல்லிக் கொண்டே செல்லலாம்.
சுருங்கக் கூறின், உலகியல் கண்ணோட்டத்தினாலேயே நடைபெறுகின்றது. கண்ணோட்டமாகிய கருணை இல்லையேல் உலகமே இல்லை. எனவே, உலகை வாழவைக்கும் கண்ணோட்டம் பெற்றில்லாதவர்கள் இந்த உலகத்துக்கு வெறும் பாரமாகவே இருக்கின்ற இழி நிலையில் உள்ளவர்கள் ஆவார்கள்.
கண்ணோட்டம் உள்ளவர், பிறக்குக்கவுவார் பிறர் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்வார். உலகத்தின் பொது நன்மைக் குப் பல வகையிலும் பாடுபடுவார்; இப்படிப்பட்டவர் களால்தான் உலகம் வாழ்கிறது. கண்ணோட்டம் இல்லாதவர்களால் உலகம் தாழ்கிறது.
கண்ணோட்டமில்லாதவர்கள் நிலத்துக்குப் பாரமாக இருப்பதற்கே உயிர் வாழ்கின்றவர்கள் ஆவார்கள். அன்னார், தமக்கும் பயன்படார்; பிறர்க்கும் பயன் படார். பயன்படா வாழ்வு வாழ்வோர் இருந்து மென்ன, இறந்துமென்ன? இரண்டும் ஒன்று தானே!
உலகியல் எதனால் நடை பெறுகின்றது? நிலத்திற்குச் சுமையாக இருப்பவர்கள் யார்?
இந்த வினாக்களுக்கு அழகாக, ஆணித்தரமாக விடையளிக்கிறது அருமைக்குறள்.
கண்ணோட்டத்து உள்ளது உலகு இயல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை(572)
2). பண்ணும் கண்ணும்
இசைக் கலைஞர் ஒருவர் அருமையாகப் பாடிக் கொண்டிருக்கிறார்; தங்களை மறந்து கேட்டுச் செவிச் சுவை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் குழுமியுள்ள மக்கள்.
புகழ் பெற்ற பாடகர் அவர். கருத்தோடு அமைந்த பாடல்களையே பாடுபவர்; பாடலின் பொருளை உணர்ந்து அதற்கேற்ற பண்ணோடு பாடுபவர். எனவே, பாடும் அவர் புகழைப் பாடி மகிழ்கிறார்கள் மக்கள்.
பாடலோடு பொருந்துகின்ற பண்ணைக்கூட்டிப் பொருத்தமுறப் பாடுவதாலேயே ஒரு பாடகரின் புகழை உலகம் பாட முடியும். பாடலோடு பொருந்தாத பண்ணால் ஒரு பயனும் இல்லை.
வீர உணர்ச்சியை எழுப்பவல்ல பாடலுக்குகென்று தனி இசையுண்டு; சாந்தத்துக்கென்று தனி இசையுண்டு; சிங்காரம், வீரம், கருணை, ருத்ரம், நகைச்சுவை, பயங்கரம், பீபத்சம், அற்புதம், சாந்தம் எனும் நவரசங் களுக்கெனவும் தனித்தனி இசைகள் உண்டு. ஆசிரியப்பா, விருத்தப்பா, வெண்பா, கலிப்பா போன்ற யாப்புகளில் அமைந்த பாக்களுக்கும் வெவ்வேறு இசை உண்டு. காலையில் பாடும் பாடல்களுக்கு ஒரு இசை, மாலையில் பாடும் பாடல்களுக்கு ஒரு இசை என்று வேளைக்கு ஏற்பப்பாடும் பாடல்களின் இசைகளிலும் பாகுபாடு உண்டு.
பண்வகைகள் பாலை, யாழ் முதலிய நூற்று மூன்று பாடல் வகைகளும் பல திறத்தன.
யாழின் கண் வார்த்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின் கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும் பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறும் ஆகும்.
இவ்வாறு உள்ள பண், பாடலோடு பொருந்தாத உடைகள், காலுக்குச் செருப்பு, கைக்கு வளையல், கழுத்துக்கு ஆரம், காதுக்குத் தோடு, மூக்குக்கு மூக்குத்தி, நெற்றிக்குச் சுட்டி, இடுப்புக்கு ஒட்டி, இப்படி எத்தனை எத்தனையோ ஆடை அணிகலன் களை விலையுயர்ந்த உலோகங்களால் வித விதமாகச் செய்து அணிந்து கொள்கிறோம்.
பத்தரை மாற்றுத் தங்கத்தால் செய்து வைரக் கற்களைப் பதித்துத் தகதகவென மின்னும்படி பெருமை யுடன் அணிந்து கொள்கிறோம். நவரத்தினங்களாலும் தொடுக்கப்பட்ட ஆரத்தைச் சூட்டிக் கொண்டு மண்ணு லகச் செல்வந்தர் வரிசையிலே முன்னணியில் நிற்கவும் செய்கிறோம்.
உடலுக்குள்ள உறுப்புகளுள் பெரும்பான்மையானவற்றிற்கு இவ்வாறு நாம் நகைகள் பூட்டியும் நல்லாடைகள் உடுத்தியும் அழகு செய்து கொள்கிறோம். கரிய கூந்தலில் பல வண்ண வாச மலர்களை அணிந்து கொள்கிறோம். அகன்ற நெற்றியில் அழகாய்த் திலகம் அணிந்து கொள்கிறோம்; நீறு பூசுகிறோம்; நாமம் ஏற்கிறோம், இவ்வாறு பலவும் பலவற்றை ஏற்கும்போது நமக்குள்ள இன்றியமையாத உறுப்பான உ கண் எதை ஏற்கிறது? எதை அணிகிறது?
ஒரு சிலர் கண்ணுக்கு மை தீட்டி அழகு செய்வர். அது வெளி அழகுதான். விரைந்து அழியக்கூடிய அழகு தான். கண்ணுக்கு அழியாத அழகு தரும் அணிகலன் எது ?
அதுதான் கண்ணோட்டம்! கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம். கண்ணோட்டம் இல்லாத கண்.... கண்ணா அது... சே.. அதுகண்ணே அல்ல... புண்!
பொருந்தாத நிலையிலிருந்தால் ஒரு பலனுமில்லை. இதைப் போலவே கண்ணோட்டம் இல்லாத கண்ணால் பயனில்லை.
கண்ணோட்டம் பெற்றதுதான் கண். மற்வற்றிற்குக் கண்கள் என்று பெயரும் இல்லை. அவை இருந்தும் பயன் இல்லை.
பாடலோடு பொருந்தாத பண்ணும், கண்ணோட்ட மில்லாத கண்ணும் பயனற்றவை என்கிறார் செந்நாப் புலவர்..
பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல்; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். (573)
3). விழித்த கண் இமைப்பின்.... ?
நமது கண்கள் பகைவரை வெகுண்டு நோக்குகின்றன. நமது உள்ளத்தில் மூண்டெழுந்த ஆத்திரத்தை நமது நேத்திரங்கள் பகைவர்க்குக் காட்டுகின்றன.
நமது கடுஞ்சினங் காட்டும் கண்களை நமது பகைவர்கள் பார்த்து விடுகின்றனர். பார்த்துப் பதறிப் போகாமல், பயந்தோடி ஒளியாமல் நம்மைத் தாக்கப் படையை ஏவுகின்றனர். அப்போது, கோபக்கனல் பொங்கிக் கொவ்வைப் பழம்போல் சிவந்து கிடந்த நமது கண்கள் பகைவர் ஏவிய படைக்கு அஞ்சி, இமைத்து விடுமேயாயின், நமது வன் கண்மை அல்லது வீரம் என்ன ஆவது? அது பகைவர்க்குப் புறமுதுகு காட்டியதாக அல்லவா கருதப்படும்?
'பகைவரை வெகுண்டு நோக்கிய கண், அந்த பகைவர் வேலைக் கொண்டு எறிய அதற்கு ஆற்றாமல்,
வெகுண்ட நோக்கை விடுத்து, மூடி இமைத்து விடுமே யானாலும் அது வீரமுடையவர்க்குப் பெருந் தோல்வியே' என்று அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறது அமுதக் குறள் ஒன்று!
விழித்தகண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பிள் ஒட்டன்றோ வன் கண் அவர்க்கு.(775)
4). தலைவனின் கண் சிந்தும் நீர்
இந் நிலவுலகிலே கோடானு கோடி உயிர்கள் பிறக்கின்றன... இருக்கின்றன.... இறக்கின்றன. பிறந்துள்ள பல்லுயிர்க்குள்ளும் மனித உயிர்க்கே மதிப்பு அதிகம். ஏன்? மனம் என்ற அரிய ஒன்றைப் பெற்றுள் ளதனால்! மனம் மனிதர் எல்லார்க்குமே உண்டு. எனின், மன உணர்வு கொண்டவரையே மனிதர் என்போம்.
மனத்தின் நெகிழ்ச்சி கண்ணீராய் வழிகிறது. நெகிழ்ச்சி என்பது களிப்புக்கும் உண்டு; கவலைக்கும் உண்டு.
ஒருவன் இறக்கிறான், அவனைச் சார்ந்தவர்கள் அழுகிறார்கள். பந்த பாசம் அவர்களை அழ வைக்கிறது. இல்லையென்றால் உலக நியதிக்கொப்ப அழவேண்டுமே என்று அவர்கள் அழுகிறார்கள்.
வேறு ஒருவன் இறக்கிறான்; அழ வேண்டியவர்களே அழாமலிருந்து விடுகிறார்கள். அவன் இறந்ததே மேல் என்ற நினைப்போ வேறு எதுவோ காரணமாக இருக்கலாம்.
மற்றொருவன் இறக்கிறான்; அவனைச் சார்ந்தவர்கள் அழுகிறார்கள்; மற்றவர்கள் அழுகிறார்கள்; அவன் இறப்பை நேரில் பாராமல் கேட்டறிந்தவர்களும் அழுகிறார்கள்; அந்த இறந்தவன் மனிதருள் சிறந்தவன் என அறிகிறோம்.
தொண்டன் இறக்கிறான்; தலைவன் அழுகிறான்; அவன் சிறந்த தொண்டன்.
போர்வீரன் இறக்கிறான்.. புரவலன் அழுகிறான்; இறந்தவன் சிறந்த போர்வீரன். அவன் இறப்பு அவனுக்குச்சிறப்பைச் சேர்க்கும் இறப்பு.
தனக்குச் சிறப்பையளிக்கும் இறப்பை, ஒருவன் பிச்சையாகவாவது பெற்றுக் கொள்வது சிறப்பே என்கிறார் வள்ளுவப் பெருந்தகையார்.
இறந்தவன் தனக்குச் செய்த நன்றிகளை எண்ணிய தலைவனின் கண்கள் நீரைப் பெருக்குமாறு ஒருவன் இறக்கப் பெற்றால், அந்தச் சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளும் பெருமையினை உடையதாகும்' எனப் புகல்கிறது பொதுமறை,
புரந்தார்கள் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. (780).
 
-திரு.கருணாமூர்த்தி , (முகநூல் பதிவு )
by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.