|
||||||||
குறள் வழி திருக்குறள் முற்றோதல் மாத மின் இதழ் - தொடக்க விழா |
||||||||
உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் பற்றி வலைத்தமிழ் நிறுவனர் திரு பார்த்தசாரதி அவர்கள் என்னிடம் பேசும் போது கூறியதுண்டு. அந்த இயக்கம் இன்றைய தினம் குறள் வழி என்ற திருக்குறள் முற்றோதல் மாத மின்னிதழ் தொடக்க விழா ஏற்பாடு செய்திருந்தது. விழா முற்றிலும் வித்தியாசமாய் இருந்ததால் அதைப் பற்றி இன்றைய தினம் எழுதத் தோன்றியது. இதில் சிறப்பு விருந்தினர்களாய் மக்கள் அறிந்த பெரும் ஆளுமைகள் இருப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால் மிகச் சிறந்த மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாய் இருந்ததை கண்டு நான் வியந்தேன். மூன்று வயது முதல் 9 வயது வரை திருக்குறளை முற்றும் ஓதி, அரசின் விருதினையும் பரிசுகளையும் பெற்ற 11 குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாய் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி சே கனிஷ்காவின் திருக்குறள் பாடலுடன் தொடங்கியது. S2Ss அறக்கட்டளை நிறுவனர் ரவி சொக்கலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த, வள்ளுவர் குறள் குடும்பம் ஒருங்கிணைப்பாளர் திரு சி ராஜேந்திரன் ஐ ஆர் எஸ் (ஓய்வு) வரவேற்புரை கூற, வலைத்தமிழ் ஆசிரியர் திரு சா பார்த்தசாரதி அவர்கள் நோக்க உரை கூற நிகழ்வு இனிதே துவங்கியது. நல்ல குழந்தைகளை உருவாக்க இந்த சமுதாயம் உதவியாய் இருந்தால், இந்த சமுதாயத்தை நல்ல சமுதாயமாய் மாற்ற இந்தக் குழந்தைகள் உதவுவார்கள் என்று ரவி சொக்கலிங்கம் சொன்ன கூற்று சிறப்பான கூற்று. குழந்தைகள் திருக்குறளை இளம் வயதிலேயே கற்பதால் அவர்கள் எதிர்காலத்தில் நல்ல இந்திய குடிகளாய் மாறும் சாத்தியம் கூடுதலாய் இருப்பதை அனைவரும் எடுத்துக் கூறினர். குழந்தைகளை முற்றோதல் செய்ய ஊக்குவிக்கும் பெற்றோர்களை வாழ்த்தினார்கள். தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்காலை சேர்த்து 40 பகுதிகளில், பகுதிக்கு 2000 நூல்கள் என்ற விகிதத்தில் 80 ஆயிரம் திருக்குறள் நூல்கள் அரசுப் அரசு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதை பார்த்தசாரதி அவர்கள் எடுத்துக் கூறி இந்த நூல்களுக்கு தேவையான நிதியைக் கொடுத்த மருத்துவர் ஜானகி ராமன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். நூல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல் அதை முற்றோதல் செய்ய எப்படி ஆசிரிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும் விவரமாய் எடுத்துக் கூறினார். அந்தக் குழுக்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்து குறள்வழி என்ற இதழைத் தொடங்கும் நோக்கத்தில் கடந்த ஒரு மாதமாய்க் குறிப்புகளைச் சேகரித்து 40 பக்க இதழாய் வெளியிட்டு இருக்கிறோம் என்று எடுத்துக் கூறினார். இனியும் இதுபோன்ற இதழ் மாதா மாதம் சென்னை அஜய்குமார் செல்வன், கோவை மேக சக்தி பாரதி, சென்னை வீ நிரஞ்சனா, தஞ்சாவூர் சா புவியரசன், திருச்சி வி ஹேமா போன்ற இளைஞர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவால் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்தார். இந்த இயக்கத்திற்கு உதவியாய் இருக்கும் மருத்துவ ஜானகி ராமன் ஐயா அவர்கள், தமிழை உலகறிய செய்ய உலகோர் நன்கறிந்த ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் மிகவும் பாடுபட்டு தமிழ் இருக்கையை அமைத்துக் கொடுத்தவர். அவர் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கி, இந்தப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் கூறிக்கொண்டார். இந்த இளைஞர்களைக் கண்டபோது எனக்கு பொறாமையாகத்தான் இருந்தது. குறளை மனப்பாடம் செய்வது என்பதும் இதழ்களுக்கு ஆசிரியர்களாய் இருப்பதும் என்பதும் எனக்கெல்லாம் எட்டாக் கனியாகத்தான் இருந்தது. இவர்களுக்கு இந்த இதழை நடத்தும் வாய்ப்பு கிட்டியது அவர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் நல்வாய்ப்புகள் காத்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க இயலாது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். திருக்குறளை முற்றோதல் செய்து கூறி அரசு விருதினைப் பெற்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த 3 வயதான சு இளமாறன், தாம்பரத்தைச் சேர்ந்த 4 வயதான ச. நி. சனந்தா, திருவண்ணாமலையைச் சேர்ந்த 6 வயதான சு இலக்கியா,செங்கல்பட்டை சேர்ந்த 7 வயதான ச பிரதீஷ், செங்கல்பட்டை சேர்ந்த எட்டு வயதான ஆ மிதுல் கிருஷ்ணா, ராஜபாளையத்தைச் சேர்ந்த 7 வயதான ரா அகிலேஷ் திருவிழா திருவாரூரை சேர்ந்த 7 வயதான கோ மகாபாரணி, கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த 8 வயதான ந. லேகா தமிழ் தனம், தஞ்சாவூரை சேர்ந்த 9 வயதான செ.பி. நரேன் சென்னையைச் சேர்ந்த ஒன்பது வயதான ர. சே. ரோனித் செங்கல்பட்டையைச் சேர்ந்த 9 வயதான இரா. தாரனேஷ்வர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொண்டு திருக்குறளைக் கூறி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர். இத்தகைய குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது குறளின் பொருளைப் புரிந்து அதில் சில குறள்களின் வழி நடந்தார்கள் என்றால் இப்போது போட்டிருக்கும் முயற்சி பலனை கொடுத்ததாய் கொள்ளலாம் என்பது என் கருத்து. இணையத்தில் இன்று சிறப்பானதொரு நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தந்த வலைத்தமிழ் நிறுவனர் திரு பார்த்தசாரதி அவர்களுக்கு முதற்கண் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புகின்றேன். இன்றைய தினம் புலனத்தில் நிகழ்வைப் பற்றிய செய்தி கிடைத்தது. இந்த நிகழ்வு குழந்தைகளைக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் எனக்கு அதில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நான் ஆங்காங்கில் வாழ்ந்த போது அடிக்கடி இது போன்று குழந்தைகள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த வண்ணம் இருப்பேன். இந்தியா வந்த பின்பு அதை செய்ய முடியாமல் இருப்பதை எண்ணி அவ்வப்போது வருந்தியதுண்டு. இத்தகைய நிகழ்வும் குறள் வழியில் ஆளுமை என்ற புலனக் குழு நடத்தும் நிகழ்விலும் குழந்தைகள் பங்கேற்பதால் அந்த வருத்தம் அவ்வப்போது மகிழ்ச்சியாய் மாறிவிடும். அந்த மகிழ்ச்சியை இன்று இந்த நிகழ்வு பெற்று தந்தது. ஒழுக்கம், நினைவாற்றல், பண்பு, கல்வியில் சிறப்பு, தூய சிந்தனை ஆகியவற்றை இந்த முற்றோதல் வழியாய் பெறுவார்கள் என்பதை எடுத்துக் கூறினார்கள். முற்றோதல் செய்த மாணவர்களுக்கு கல்லூரி படிப்பில் உதவி தேவைப்பட்டால் கொடுக்கும் திட்டம் இருப்பதாய் நிகழ்விலே மருத்துவர் ஜானகிராமன் ஐயா தெரிவித்தது, முற்றோதல் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாய் இருக்கும் என்று நிகழ்வில் பங்கு கொண்டோர் பலரும் கூறினார். நிகழ்வில் முற்றோதல் கற்றுத் தரும் ஆசான்களும் ஒருங்கிணைப்பாளர்களும், இந்த இயக்கத்திற்கு வாழ்த்துக்களைக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க விரும்புவோர் வலைதமிழ் தொலைக்காட்சியில் இணையத்தின் வழியாய் காணலாம்.
-சித்ரா சிவக்குமார் , ஹாங்காங் |
||||||||
by Swathi on 11 Oct 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|