திருக்குறள் ஐரிஷ் (கேலிக்) மொழியாக்க நூல் வெளியீடு டப்ளின், 10 டிசம்பர் 2023 ______________________________ அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரியில் திருக்குறள் ஐரிஷ் மொழியாக்க நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்புற நடந்தேறியது.
அயர்லாந்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த தமிழர்கள் மகிழ்வுடன் பங்கேற்ற இவ்விழா அயர்லாந்தின் மரபு இசை மற்றும் தமிழர்களின் மரபு இசை முழங்க இனிதே தொடங்கியது.
டிரினிட்டி கல்லூரியின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் திருமிகு. ஓன் மெக்கார்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நல்கினார். அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழக முதல்வர் திருமிகு. இராசகுமார் சம்பந்தம் அவர்கள் தொடக்க உரையுடன், நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களுக்கு அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழக நிருவாகக் குழுவினர் பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தனர்.
தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர் தந்திட்ட உலகப் பொதுமறை திருக்குறள் ஐரிஷ் மொழியாக்க நூலைச்
சீரிய முறையில் மொழியாக்கம் செய்திட்ட கவிஞர் திரு. கேப்ரியல் ரோசன்ஸ்டாக் அவர்கள் திருக்குறள் ஐரிஷ் நூலை டிரினிட்டி மொழித்துறைப் பேராசிரியர் திருமிகு. மைக்கேல் குரோனின் முன்னிலையில் வழங்க, அயர்லாந்து இந்தியத் தூதரக முதன்மைச் செயலர் திருமிகு. முருகராஜ் தாமோதரன் அவர்கள் பெற்றுக் கொண்டு நூலை வெளியிட்டார்.
நிகழ்வில் இந்தியத் தூதரக முதன்மைச் செயலர் திருமிகு.முருகராஜ் தாமோதரன், டிரினிட்டி மொழித்துறைப் பேராசிரியர் திருமிகு.மைக்கேல் குரோனின் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த தமிழ்ப் பேராசிரியர் திருமிகு. மணலி சோமசுந்தரம் சம்பந்தம் ஆகியோர் சிறப்புரை நல்கி, மொழியாக்கப் பணியைப் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.
நிகழ்வில் பங்குபெற்ற தமிழர்கள் தமிழில் திருக்குறள் சொல்ல, அதற்கு கவிஞர் திருமிகு. கேப்ரியல் ரோசன்ஸ்டாக் அவர்கள் அக்குறட்பாக்களை ஐரிஷ் மொழியில் அழகாகக் கவிதை நடையில் வாசித்தார்.
அடுத்த நிகழ்வாக, அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத் திருக்குறள் மொழிபெயர்ப்புக் குழுவினர் திருமிகு. இராசகுமார் சம்பந்தம், திருமிகு. சரவணன் இராமமூர்த்தி, திருமிகு. சரண்யா இரமேஷ், திருமிகு. குறள் இனியன் சிவஞானம், திருமிகு. முத்துராம்பிரகாஷ் தங்கவேல்சாமி, திருமிகு. தனலட்சுமி முருகேசன் ஆகிய அனைவருக்கும் பேராசிரியர் திருமிகு. ஓன் மெக்கார்த்தி மற்றும் இந்தியத் தூதரக முதன்மைச் செயலர் திருமிகு. முருகராஜ் தாமோதரன் அவர்களால் பாராட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாகத் திருக்குறள் ஐரிஷ் மொழியாக்கத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய முனைவர் பேராசிரியர் திரு. ஓன் மெக்கார்த்தி அவர்களுக்கும், மிகவும் சீரிய முறையில் மொழியாக்கம் செய்திட்ட கவிஞர் திரு. கேப்ரியல் ரோசன்ஸ்டாக் அவர்களுக்கும் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தினர் பாராட்டுச் சான்றிதழும், பேராசான் திருவள்ளுவர் திருவுருவச் சிலையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
பேராசிரியர் முனைவர் திருமிகு. ஓன் மெக்கார்த்தி நன்றியுரை நல்க, வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.
பேரன்பு மற்றும் நன்றியுடன், அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம்
|