|
||||||||
இன்றைய எழுத்துத்தமிழில் செயல்படும் ஒரு ''புதிய'' இலக்கண விதி ... |
||||||||
இன்றைய எழுத்துத்தமிழுக்கான தரவகத்தை ஆய்வுசெய்யும்போது, நானும் எனது நண்பரும் கணினிப் பொறியாளருமான திரு. சரவணன் அவர்களும் காணுகின்ற ஒரு ''புதிய'' இலக்கண விதியை ஒரு கருதுகோளாக இங்கு முன்வைக்கிறோம்.
இதுபற்றி அமெரிக்காவில் பணியாற்றும் வேதிப்பொறியியலாளர் திரு. இராமசாமி செல்வராசு அவர்களும் தனது பதிவு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்கள். பின்னர் இக்கருதுகோளை நேற்று எனது முகநூல் பக்கத்தில் தமிழ் ஆய்வாளர்களின் கருத்துக்களுக்காக முன்வைத்திருந்தேன். அமெரிக்காவில் கூகுளில் பணியாற்றும் கணினியியல் அறிஞர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியம், சிதம்பரத்தில் பணியாற்றும் மருத்துவர் ஐயா திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம், மொழியியல் பேராசிரியர் செம்மொழி கே. இராமசாமி, பேராசிரியர் தமிழ் வளனறிவு, நண்பர் திரு. அரி அரவேலன் யரலவழள, மொழியியல் பேராசிரியர் திரு. ரவிசங்கர் கங்காதரன் ஆகியோர் உரையாடலில் பங்கேற்றனர். நண்பர் திரு. இராமசாமி துரைப்பாண்டி, பேரா. அருள்மொழி உட்பட நண்பர்கள் பலர் எனது பதிவை விரும்பியிருந்தனர். (பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் , இனிய நண்பர் திரு. முத்தையா சுப்பிரமணியம் உட்பட மேலும் தமிழ் அறிஞர்கள் பலரது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.)
அதனடிப்படையில் கீழ்க்கண்ட இலக்கண விதியை ஒரு ''கருதுகோளாக (hypothesis) '' ஆகமட்டுமே இங்கு முன்வைக்கிறோம். இந்த விதிக்கு மாறான எடுத்துக்காட்டுக்கள் நமக்குக் கிடைத்தால், பின்னர் இதை மாற்றிக்கொள்ளலாம்.
------------------------------------------------------------------------
வன்தொடர்க்குற்றியலுகரத்திற்குப்பின் ஒற்று மிகுதல் என்பது மூன்று மொழிச்சூழல்களிலும் நிகழ்கிறது ; விலக்கின்றி நிகழ்கிறது.
(1) செய்து வாய்பாட்டு வினையெச்சச் சொல்லிற்குப்பின்னர் வருமொழியில் வல்லினம் வரும்போது - 'படித்துப்பார்த்தான்''- நிகழ்கிறது.
(2) பெயர் + வினை அமைப்பு வரும்போதும் - 'அலுப்பு + தட்டு = அலுப்புத்தட்டு' - நிகழ்கிறது.
(3) வினை + பெயர் அமைப்பு வரும்போதும் - 'ஆட்டு + கல் = ஆட்டுக்கல் ' - நிகழ்கிறது.
எனவே, இதை விதிவிலக்காகக் கொள்வதற்குப்பதிலாக, ஒரு பொது விதியாக - ஒலியியல், ஒலியனியல், மொழியசை ஆகியவற்றின் அடிப்படையில் - கொள்ளலாம் அல்லவா? இந்த விதிக்கும் பிற விதிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும்போது, இந்த விதியே முதன்மைபெறுகிறது என்றும் கொள்ளலாம் அல்லவா? இதுவே எங்களது தற்போதைய கருதுகோள்.
-தெய்வ சுந்தரம் நயினார்
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|