1979 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார் . அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது . மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அன்றைய முதலமைச்சரான எம் . ஜி . ஆர் அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் . கக்கன் மருத்துவமனையில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரும்பினார் . முன்னறிவிப்பின்றிக் கக்கனைப் பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார் .
இது குறித்துத் தினமலர் நாளிதழ் வெளியிடும் வாரமலர் (26.03.2000 இதழில் ) மதுரை எஸ் . எஸ் . இராமகிருட்டிணனின் “ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் பகுதி இதோ …!
“மதுரையில் 1980 மேதின விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் எம் . ஜி . ஆர் . முன்னாள் மதுரை மேயர் முத்து , அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் . மதுரை வந்த எம் . ஜி . ஆர் . ஆஸ்பத்திரி சென்று , உடல்நலம் விசாரித்தார் . பின்னர் காருக்குத் திரும்பிக் கொண்டிருந்த காளிமுத்து , பாலகுருவாரெட்டியார் ஆகியோர் எம் . ஜி . ஆரிடம் , ‘ அண்ணே முன்னாள் மந்திரி கக்கன் கடந்த ஒரு மாதமா இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று கூறவே எம் . ஜி . ஆர் . திடீரென நின்று ‘இதை ஏன் முதலில் கூறவில்லை . அவர் எந்த வார்டில் இருக்கிறார் ?’ எனக் கேட்டார் . உடனே , கக்கனைப் பார்க்கச் சென்றார் .
ஆஸ்பத்திரியில் சாதாரண வகுப்பில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கனின் அறையில் அவசரமாக எங்கிருந்தோ சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டன . உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு , முக்கால் நிர்வாண கோலத்தில் இருந்த கக்கனைப் பார்த்த எம் . ஜி . ஆர் அவர்களுக்குச் சில நிமிடங்கள் ஒன்றுமே பேசஇயலவில்லை . ஒருவரைப் பார்த்து ஒருவர் கண் கலங்கினர் . இந்தக் காட்சியைக் கண்ட உடன் சென்றிருந்த அனைவரும் உணர்ச்சிப் பிழம்பாயினர் . காமராஜர் காலத்தில் போலீஸ் மந்திரியாக இருந்தவர் கக்கன் . அவரது உத்தரவுக்காக எத்தனை அதிகாரிகள் காத்திருப்பர் . அப்படிப்பட்டவரை , இன்று இந்தக் கோலத்தில் பார்த்து , கக்கனின் கைகளைப் பிடித்துக்கொண்டு கலங்கிய எம் . ஜி . ஆர் ., ‘ உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் ?’ எனக் கேட்டார் . ‘ உங்கள் அன்பு இருந்தால் போதும் … நீங்கள் பார்க்க வந்ததே சந்தோஷம்’ என்றார் கக்கன் .
‘விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா ?’ எனக் கேட்டார் எம் . ஜி . ஆர் . ‘ வேண்டாம்’ என மறுத்தார் கக்கன் . புறப்படும்போது , மீண்டும் கக்கனின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு ‘என்னிடம் என்ன உதவி தேவையாயினும் உடனே தெரியப்படுத்துங்கள் செய்கிறேன்’ எனக்கூறி விடை பெற்றுச்சென்றார் .
இதற்குப்பின்னாலும் எம் . ஜி . ஆர் . அப்படியே விட்டுவிடவில்லை . உடனே அந்த மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்து , ‘ இவர் யார் என்று தெரியுமா ? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது ?’ என்று கேட்டதோடு நில்லாமல் , தனியறை வசதியும் தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு ஆணையிட்டார் . மேலும் ‘ஏதேனும் மருந்து கிடைக்கவில்லை என்றால் எனக்குச் செய்தி கொடுங்கள் . அம்மருந்துகள் கிடைக்க ஆவன செய்கிறேன்’ என்று கூறிச் சென்றார் . மனம் கனிய நலம் கேட்டுக் கக்கனிடமிருந்து விடை பெற்றார் . சென்னைக்குத் திரும்பியதும் கக்கனின் நலனுக்காக , முன்னாள் அமைச்சர் போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் இலவச மருத்துவ சிகிச்சைக்கும் , இலவச பேருந்துப் பயணத்திற்கும் அரசாணை வெளியிட்டார் . பின்னர் கஸ்தூரி சிவசுவாமி அவர்களின் வேண்டுகோளை ஏற்று இலவச வீட்டிற்கும் ஓய்வூதியத்திற்கும் ஆவன செய்தார் . காலத்தில் செய்த இவ்வுதவியைக் கக்கனின் குடும்பத்தினர் இன்றும் நினைவு கூறுகின்றனர் .
|