|
||||||||
பிறர் நலம் பேணிய பெருந்தகை |
||||||||
ஓரிடத்தில் ஒரு ஆங்கிலேயன் , ஒரு பிரெஞ்சுக்காரன் , ஒரு டச்சுக்காரன் மூவரும் பயணம் செய்தனர் . அங்கே ஒரு கல்லறையைக் காட்டிய கவிஞர் “ இவர் மிகப்பெரிய கவிஞர் . ஆனால் வாழ்ந்த காலத்தில் வறுமையில் வாடியவர் ” என்றார் . அடடா ஒரு கவிஞர் வறுமையில் வாடலாமா என உணர்ச்சி வசப்பட்ட பிரெஞ்சுக்காரன் தனது பர்ஸை எடுத்து நூறு டாலர் நோட்டை வைத்து அஞ்சலி செய்தான் . அதைப் பார்த்த ஆங்கிலேயன் அவனை விட நான் குறைந்தவனா என்றெண்ணி இருநூறு டாலர் நோட்டை வைத்து அஞ்சலி செலுத்தினான் . இதைப் பார்த்த டச்சுக்காரன் “ ச்சே ! கவிஞருக்கு நீங்கள் செலுத்துகின்ற அஞ்சலியின் லட்சணம் இதுதானா ? நான் ஆயிரம் டாலர் தரப்போகிறேன் . எல்லாருக்கும் சேர்த்து செக்காக எழுதி விடுகிறேன் . என்று கூறி விட்டு 1300 டாலருக்கும் செக்கை எழுதி வைத்து விட்டு அவர்களது முன்னூறு டாலர் நோட்டுகளை எடுத்துச் சென்றான் . இப்படி அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் வாழும் நாட்டில் பிறர் நலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு வாழ்ந்தவர் தலைவர் . ஒருநாள் பெருந்தலைவரைப் பார்க்க ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி வந்தார் . தன் இல்லத் திருமணத்துக்கான அழைப்பிதழ் எடுத்து வந்திருந்தார் . பெருந்தலைவர் அவரை அழைத்து அமரச்செய்து நலம் விசாரித்தார் . அதே நேரம் அவருடைய ஏழ்மையினையும் புரிந்து கொண்டார் . திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி வாழ்த்துக்களைக் கூறி அனுப்பினார் . வந்தவர் மனம் வருந்தி விடைபெற்றார் . “ காமராஜ் இன்று பெரிய தலைவராகி விட்டார் . அந்தக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரே சிறையில் அடைபட்டோம் . இன்று மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் . ஏழையான நம் இல்லத்துக்கு வர அவர் அந்தஸ்து இடம் தருமா ” என்றெண்ணியபடி ஊர் போய்ச் சேர்ந்தார் . விழா நாளும் வந்தது . அந்தச் சிற்றூரில் தன் பொருளாதார வசதிக்கேற்ப மிக எளிமையாக விழாவை நடத்திக் கொண்டிருந்தார் . திடீரென வீதியில் பரபரப்பு , ஆரவார ஒலி சத்தம் கேட்டுத் தியாகி வெளியே வந்து பார்த்தார் . அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை . வந்து நின்ற காரிலிருந்து புன்னகை பூத்த முகத்தோடு காமராசர் இறங்கினார் . தியாகியின் கைகளைப் பற்றிக் கொண்டார் . தியாகிக்கோ கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது . அவரைத் தட்டிக்கொடுத்த தலைவர் , “ வா விழா மேடைக்குப்போவோம் ” என்று கூறி உள்ளே சென்று மணமக்களை ஆசீர்வதித்தார் . அவரை அமரச்செய்ய சரியான ஆசனம் கூட இல்லையே என்று தியாகி ஏக்கத்தோடு எண்ணமிட்டார் . அப்போது காமராசர் , “ நீ அழைப்பிதழ் கொடுக்க வந்த அன்றே நான் திருமணத்துக்கு வர்றதை முடிவு பண்ணிட்டேன் . ஆனா நான் அப்பவே வர்றதாச்சொல்லியிருந்தா முதலமைச்சரே வர்றாருன்னு சொல்லி கடனை வாங்கித் தடபுடலாப் பண்ணியிருப்பே . உன்னை மேலும் கடன்காரனாக்க நான் விரும்பல . இப்ப வந்துட்டேன் . உனக்கு திருப்திதானே ” என்றார் . கூடியிருந்த கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்தார் தியாகி . மெய்சிலிர்த்தது . “ சரி வரட்டுமா . மேற்கொண்டு காரியத்தைக் கவனி ” என்று சொல்லிவிட்டு விடை பெற்றார் தலைவர் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|