தெருவில் நடந்து கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து ஒருவர் தம்பி தலைமுடி நெறைய வளர்ந்திருக்கே முடி வெட்டிக்கிறியா ? என்றார் . பையனும் சந்தோஷமாக சரி என்றான் . ஒரு சலூனுக்கு அழைத்துப்போனார் . முதலில் அவர் தனக்கு முடி வெட்டிக் கொண்டார் . நான் கடைத்தெரு வரை போய் வருகிறேன் . அதற்குள் பையனுக்கு வெட்டுங்கள் என்று சலூன்காரரிடம் சொல்லி விட்டு நடையைக் கட்டினார் . அந்த பையன் அவருடைய மகன் என்று நினைத்து சலூன்காரரும் முடி வெட்டி முடித்தார் . நெடுநேரமாகியும் போனவர் திரும்பவில்லை . உன் அப்பா ஏன் இன்னும் வரவில்லை என்று சலூன்கார் கேட்க , “ அவர் என் அப்பா இல்லை . தெருவில்போகும்போது முடி வெட்டிக்கிறியா என்றார் . நானும் சரின்னு வந்தேன் . அவர் யாருன்னே எனக்கு தெரியாது .” என்று பையன் பதில் சொல்ல அப்போது தான் பையனை அழைத்து வந்தவரின் ஏமாற்று வேலை புரிந்தது . தங்களின் சுயநலத்துக்காக குழந்தைகளை இப்படிப் பயன்படுத்துபவர்கள் உண்டு .
குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இலவசக் கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் . அது தவிர தனிப்பட்ட முறையிலும் அவர் குழந்தைகளிடம் அன்பு காட்டியவர் . நவசக்தி அம்பி என்பவர் எழுதியிருக்கும் அந்த நிகழ்ச்சி நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது . பெருந்தலைவர் ஒருநாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார் . அப்போது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே நுழைகிறார்கள் . பரட்டைத் தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் நிலைமையைப் பறைசாற்றுகின்றன . பணியாளர் ஒருவர் அவர்களை அடித்து விரட்டுகிறார் . கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கித் தயங்கி நிற்கின்றன . மீண்டும் வீட்டுக்குள்ளே வர முயற்சிக்கின்றன . தம்மைப் பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய பெருந்தலைவரின் கூரிய கண்களில் அந்தக் குழந்தைகள் பட்டுவிட்டன . அவ்வளவுதான் அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க “ என்ன யாரைப் பார்க்க வந்தீங்க .?” என்று கேட்டபடி அவரே குழந்தைகளிடம் வந்து விட்டார் . சிறுமி தயங்கித் தயங்கிப் பேசினாள் . உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டுந்தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரிட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களைப் பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அதுதான் வந்தோம் . அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தபடி “ அம்மா தான் அனுப்பிச்சாங்களா ?” “ இல்லை . நாங்களாகத்தான் வந்தோம் , அம்மா அப்பளம் போட்டு வீடு வீடா விக்கிறாங்க . அதுல தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க ” என்று சிறுமி சொன்னதும் அதற்குமேல் கேட்டுக்கொண்டிருக்க தலைவரால் முடியவில்லை . அன்பு உள்ளம் உருகியது . வீட்டுப்படிகளில் ஏறி மாடிக்குச் சென்ற அவர் கையில் ஒரு கவருடன் வந்தார் . சிறுமியிடம் கொடுத்து “ இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க . அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் ” என்று ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார் . மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தன . வைரவன் குழந்தைகளை அழைத்து வந்தார் . வாங்க … வாங்க … என்று வாய் நிறைய வரவேற்றார் பெருந்தலைவர் .
பரிட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க என்று ரசீதை தலைவரிடம் சிறுமி நீட்டினாள் . பெருந்தலைவர் கண் கலங்கி விட்டார் . ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை வணங்கின . அவர் குழநதைகளை அன்போடு தட்டிக்கொடுத்து வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் .
நேர்மையுள்ளவர்கள் யாரும் ஏழையில்லை . நேர்மை தவறியவர்கள் யாரும் செல்வந்தரில்லை .