|
||||||||
கருத்துரைப் பாட்டு |
||||||||
2.19. தலைவன் கூற்று (வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலவன், தன் தேர்ப்பாகனை நோக்கி, `இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து' என்று கூறுவது.) நாமின்று சென்று நாளையே வருவோம்; வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்; இளம்பிறை போல்அதன் விளங்கொளி உருளை விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக் காற்றைப் போலக் கடிது மீள்வோம்; வளயல் நிறைந்த கையுடை இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே. (குறுந்தொகை 189--ஆம் பாடல். மதுரை ஈழத்துப் பூதன்றேவன் அருளியது.) 2.20. தலைவி கூற்று (தலைவனை நினைத்துத் தான் துயிலாதிருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.) ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்தைக் கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின் சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை எண்ணித் துயில்நீங் கியஎன் கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே! (குறுந்தொகை 186--ஆம் பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது.) 2.21. தோழி கூற்று (தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே வந்து நிற்கிறான்.அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி: "தலைவன் நட்பினால் உன்தோள் வாடினாலும் உன் அன்பை அது குறைத்துவிடவில்லை" என்று.) மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில் இரவில் முழங்கிக் கருமுகில் பொழிய, ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம் அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற- நாடனது நட்புநின் தோளை வாடச் செய்யினும் அன்பைமாய்க் காதே! 2.22 கதவு பேசுமா? காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன் ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத் தெருக்கதவில் ஊன்றினான். "திறந்தேன்" என்றோர்சொல் வரக்கேட்டான். ஆஆ! மரக்கதவும் பேசுமோ? "என்ன புதுமை" எனஏங்க, மறுநொடியில் சின்னக் கதவு திறந்த ஒலியோடு தன்னருமைக் காதலியின் தாவுமலர்க் கைநுகர்ந்தான்! புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான். "என்னேடி தட்டுமுன்பு தாழ்திறந்து விட்டாயே" என்றுரைத்தான். விட்டுப் பிரியாதார் மேவும்ஒரு பெண்நான் பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை, தெருவில் கருமரத்தாற் செய்த கதவு. |
||||||||
by Swathi on 25 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|