|
||||||||
திராவிடன் |
||||||||
2. 31. திராவிடன் கடமை மனவீட்டைத் திறப்பாய் - சாதி மனக்கத வுடைத்து மனவீட்டைத்... இனமான திராவிடர் பண்பின் எழில்காண உணர்வு விளக்கேற்று மனவீட்டைத்... புனைசுருட் டுக்குப்பை அன்றோ - பழம் புராண வழக்கங்கள் யாவும்? இனிமேலும் விட்டுவைக் காதே எடுதுடைப் பத்தைஇப் போதே தனிஉலகை ஆண்டனை முன்னாள் தன்மானம் இழந்திடாதே இந்நாள் மனவீட்டைத்... வடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி இடைநாளில் மட்டுமா? சென்ற இரண்டாயிரத் தாண்டு பார்த்தார் விடுவாயாடா தன்ன லத்தை - உன் விடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு. மனவீட்டைத்... 2. 32.. அது முடியாது கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை கொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை. கோட்டை நாற்காலி... கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக் கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை. கோட்டை நாற்காலி... காட்டை அழிப்பது கூடும் - அலை கடலையும் தூர்ப்பது கூடும் மேட்டை அகழ்வதும் கூடும் - விரி விண்ணை அளப்பதும் கூடும் ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும் - உரிமை எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்? கோட்டை நாற்காலி... அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை அழிக்குமுறை எவ்வாறு முடியும்? ஒடுக்குசிறை காட்டுதல் முடியும் - உணர் வொடுக்குதல் எவ்வாறு முடியும்? திடுக்கிடச் செய்திடும் உன்னை - இத் திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்? கோட்டை நாற்காலி... 2.33. பிரிவு தீது கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம் கேடுற ஆந்திரம் புய்ப்பதுவும் சேரும் திராவிடர் சேரா தழித்திடச் செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக் கொய்திட வேண்டும் அண்ணே. கேரளம் என்னல் திராவிடமே - ஒரு கேடற்ற ஆந்திரம் அவ்வாறே கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள் திராவிடம் ஆகும் அண்ணே - வேறு இராதெனல் உண்மை அண்ணே. செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும் நந்தம் திராவிட நாடெனல் அல்லது வந்தவர் நாடாமோ? - அவை வடவர் நாடாமோ? செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள் அந்த மிகுந்த திராவிடம் அல்லது ஆரியச் சொல்லாமோ? - அவர் வேர்வந்த சொல்லாமோ? 2.34. உணரவில்லை உணரச் செய்தான் உன்னை - அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் உணரச் செய்தான்... தணலைத் தொழுவோன் உயர்வென் கின்றான் - உனைத் தணலில் தள்ள வழிபார்க் கின்றான். உணரச் செய்தான்... முணுமுணு வென்றே மறைவிற் சென்றே முட்டாள் முட்டாள் திராவிடன் என்றே பணிமனை ஆட்சி பட்டம் யாவும் பார்ப்பா னுக்கே என்றுபு கன்றே. உணரச் செய்தான்... நானிலம் ஆண்டான் திராவிடன் அந்நாள் நான்மேல் என்றான் பார்ப்பான் இந்நாள் ஏனவன் காலில் வீழ்தல் வேண்டும்? எண்ணில் கோடி மக்கட் குறவே. உணரச் செய்தான்... அடியை நத்திப் பிழைத்த பார்ப்பான் ஆளப் பிறந்த தாய்ச்சொல் கின்றான் துடியாய்த் துடித்தான் உன்றன் ஆட்சி தூளாய்ச் செய்துனை ஆளாக் கிடவே. உணரச் செய்தான்... 2.35. உயிர் பெரிதில்லை ஒருவன் உள்ள வரையில் - குருதி ஒரு சொட்டுள்ள வரையில் ஒருவன் உள்ள வரையில்... திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன் ஒருவன் உள்ள வரையில்... பெரிது மானம்! உயிர்பெரி தில்லை! பெற்ற தாயைப் பிறராள விடுவோன் திராவிடன் அல்லன்! திராவிடன் அல்லன்! தீமை செய்து பார்க்கட்டும் ஆள்வோர்! ஒருவன் உள்ள வரையில்... அடித்தோன் அடிபட நேர்ந்ததிவ் வுலகில் ஆள வந்தார் ஆட்படல் உண்டு நெடிய திராவிடம் எங்களின் உடைமை நிறைவுணர் வுண்டெங்கள் பட்டாள முண்டு! ஒருவன் உள்ள வரையில்... வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ? வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ? அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை! ஒருவன் உள்ள வரையில்... 2.36. இனி எங்கள் ஆட்சி தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி சற்றும் நிலைக்காது! மாளும்! தன்னினம் மாய்க்கும்... இந்நிலம் திராவிடர் ஆண்டார் இறந்தநாள் வரலாறு காண்க. தன்னினம் மாய்க்கும்... மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய மன்னவன் திராவிட மன்னன் - எதிர் வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோள் திராவிட மன்னவன் தோளே! சின்ன நினைப்புகள் தன்மான மற்ற செயல்களை இனிவிட்டு வையோம். தன்னினம் மாய்க்கும்... திராவிடப் பெருங்குடியில் வந்தவன் திராவிடத் திருநாடு பெற்ற சேய்தான் - இத் திராவிடர்க் கின்னல் செய்துதன் நன்மை தேடினான் எனிலவன் நாய்தான்! எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை இனிஎங்கள் ஆட்சிஇந் நாட்டில். தன்னினம் மாய்க்கும்... 2.37. தமிழனுக்கு வீழ்ச்சியில்லை தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி தாழ்வதில்லை! தமிழ்நாடு, தமிழ மக்கள், தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்த தில்லை! தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ னுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்! தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ? தமிழகத்தில் மலைபோன்ற செல்வத் தாரும், தம்ஆணை பிறர்ஏற்க வாழு வாரும், தமிழர்க்கோ தமிழுக்கோ இடையூ றொன்று தாம்செய்து வாழ்ந்தநாள் மலையே றிற்றே! உமிழ்ந்தசிறு பருக்கையினால் உயிர்வாழ் வாரும் உரமிழந்து சாக்காட்டை நண்ணு வாரும் தமிழ்என்று தமிழரென்று சிறிது தொண்டு தாம்புரிவார் அவர்பெருமை அரசர்க் கில்லை! ஒருதமிழன் தமிழர்க்கே உயிர்வாழ் கின்றான்; உயிர்வாழ்வோன் தமிழர்க்கே தனைஈ கின்றான்; அரியபெருஞ் செயலையெலாம் தமிழ்நாட் டன்பின் ஆழத்தில் காணுகின்றான்! தமிழன் இந்நாள் பெரிதான திட்டத்தைத் தொடங்கி விட்டான்; "பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்; வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும்." வாழ்கதமிழ்! இவ்வையம் வாழ்க நன்றே! அந்நாளின் இலக்கியத்தை ஆய்தல் ஒன்றே அரும்புலமை எனும்மடமை அகன்ற திங்கே! இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி எழுத்தெழுத்துக் கினிப்பேற்றிக் கவிதை தோறும் தென்நாட்டின் தேவைக்குச் சுடரை யேற்றிக் காவியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு பொன்னான கலைப்பேழை என்று சொல்லும் புகழேற்றி வருகின்றார் - அறிஞர் வாழ்க! 2.38. தமிழன் அறியச் செய்தோன் தமிழன் அறிந்த அனைத்தும் வையத்தார்கள் அறியச் செய்தோன்... செறிந்து காணும் கலையின் பொருளும் சிறந்த செயலும் அறமும் செய்து நிறைந்த இன்ப வாழ்வைக் காண நிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள் அறியச் செய்தோன்... காற்றுக் கனல்மண் புனலும் வானும் தமிழன் கனவும் திறமும் கூட்டி நாற்றிசை அழகை வாழ்வைச் செய்ய நவின்று, நவின்று, நவின்று முன்னாள் அறியச் செய்தோன்... எங்கும் புலமை எங்கும் விடுதலை எங்கும் புதுமை கண்டாய் நீதான்! அங்குத் தமிழன் திறமை கண்டாய்! அங்குத் தமிழன் தோளே கண்டாய்! அறியச் செய்தோன்... 2.39. பகை நடுக்கம் தமிழர் என்று சொல்வோம் - பகைவர் தமை நடுங்க வைப்போம் இமய வெற்பின் முடியிற் - கொடியை ஏற வைத்த நாங்கள். தமிழர் என்று... நமத டாஇந் நாடு - என்றும் நாமிந் நாட்டின் வேந்தர் சமம்இந் நாட்டு மக்கள் - என்றே தாக்கடா வெற்றி முரசை! தமிழர் என்று... எந்த நாளும் தமிழர் - தம்கை ஏந்தி வாழ்ந்த தில்லை. இந்த நாளில் நம்ஆணை - செல்ல ஏற்றடா தமிழர் கொடியை. தமிழர் என்று... வையம் கண்ட துண்டு - நாட்டு மறவர் வாழ்வு தன்னைப் பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே பேரி கைமு ழக்கு. தமிழர் என்று... 2.40. கூவாய் கருங்குயிலே எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே! கன்னடம் தெலுங்குமலை யாளம் களிதுளுவம் முன்னடைந்தும் மூவாது மூள்பகைக்கும் சோராது மன்னும் தமிழ்தான்இவ் வையத்தை யாள்கஎனக் கன்னற் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே! வராதெனச் சொன்னாரும் வருந்தத்தன் ஆட்சி இராத இடமில்லை என்றநிலை நாட்டத் திராவிட நாடு சிறைநீங்க என்று குரலே முரசாகக் கூவாய் கருங்குயிலே! உண்ணல் உடுத்தல் உயிர்த்தல்எனச் செந்தமிழை நண்ணலும் ஆம்என்று நாட்டுக; வேறுமொழி எண்ணல் நிறுவல் இலாதுகல்வி கட்டாயம் பண்ணல் பயன்என்று கூவாய் கருங்குயிலே! செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே! இளைஞர் துடிக்கின்றார் தமிழின் நிலைஎண்ணிக் கிளைஞர் அடைகின்ற கேடுபொறார் இங்கு விளையாட வேண்டாமே ஆளவந்தார்! வாழ்வின் களைநீக் குகஎன்று கூவாய் கருங்குயிலே! பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும் ஆலோடு வேர்என் றறிந்திருந்தும் ஆளவந்தார் மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி சாலோடு நீர்என்று சாற்றாய் கருங்குயிலே! 2.41. தமிழர்களின் எழுதுகோல் கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும் கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால் தெருத்தூற்றும்; ஊர்தூற்றும்; தம்முளமே தம்மேற் சிரிப்பள்ளித் தூற்றும்!நலம் செந்தமிழ்க்கும் என்னாம்? தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால் சரசரெனக் கருத்தூறும் மனப்பழக்கத் தாலே! இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சி மனப்பான்மை ஏற்படுத்தல்; பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம். விருப்பத்தை நிறைவேற்ற முயலுங்கால் வையம் வெறுந்தோற்றம் என்னும்ஒரு வேதாந்தப் பேச்சேன்? மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம். உரத்தினிலே குண்டுபுகும் வேளையிலும் மக்கள் உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்! பெருநிலத்தார் எல்லோரும் ஒருதாயின் மக்கள் பிறர்தமர்என் றெண்ணுவது பேதமையே அன்றோ? பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க! புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும் அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால் எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை? ஏற்றசெயல் செய்தற்கும் ஏன்அஞ்ச வேண்டும்? உதிர்த்திடுக பொன்மலர்கள் உயர்கைகள், நன்றே உணர்ந்திடுக உளங்கவரும் புதுமணத்தை யாண்டும். 2.42. இசைத் தமிழ் மேசை விளக் கேற்றி - நாற்காலி மீதில் அமர்ந்தே நான் ஆசைத் தமிழ் படித்தேன் - என்னருமை அம்மா அருகில் வந்தார் மீசைத் தமிழ் மன்னர் - தம்பகையை வென்ற வர லாற்றை ஓசை யுடன் படித்தேன் - அன்னைமகிழ் வுற்றதை என்ன சொல்வேன்! செந்தமிழ் நாட்டி னிலே - வாழ்கின்ற சேயிழை யார் எவரும் வந்த விருந் தோம்பும் - வழக்கத்தை வாய்விட்டுச் சொல்லு கையில் அந்தத் தமிழன் னையின் - முகத்தினில் அன்பு பெருகி யதை எந்த வகை உரைப்பேன்! - கேட்டபின்பும் இன்னும்சொல் என்றுரைத் தார்! கிட்டநெருங்கி எனைப் - பிள்ளாய்என்று கெஞ்சி நறுந் தேனைச் சொட்டு வதைப் போலே - வாய்திறந்து சொல்லொரு பாடல் என்றார் கட்டிக் கரும் பான - இசைத்தமிழ் காதினிற் கேட்ட வுடன் எட்டு வகைச் செல்வமும் - தாம்பெற்றார் என்னைச் சுமந்து பெற்றார்! 2.43. சிறுத்தையே வௌியில் வா! பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வௌியில்வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வௌியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா? கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப் பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென் பார்எனில், வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே? மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக! இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும் புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும் வையம் ஆண்ட வண்டமிழ் மரபே கையி ருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு! நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு! பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக! கைக்குள திறமை காட்ட எழுந்திரு! வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்! வாழ்க திராவிட நாடு! வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே! 2.44. தீவாளியா? நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது! "உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம் நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?" என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்! உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள். தீவா வளியும் மானத் துக்குத் தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே! 2. 45. பன்னீர்ச் செல்வம் மார்புற அணத்து நாதன் மங்கைக்குத் தந்த இன்பம் சார்புறத் தேகம் தன்னை மனத்தினைத் தழுவும் நேரம் நேரினில் இருந்த நாதன் மறைந்தனன் என்றால் நேயக் கார்குழல் மங்கை கொள்ளும் கடுந்துயர்க் களவு முண்டோ? இறைந்தநற் றமிழர் தம்மை இணைத்தசீர் இராம சாமி அறைந்தநல் வழியே இந்தி அரவினைக் கொன்றான் செல்வன் நிறைந்தஅத் தேனை நாட்டார் நினைந்துண்ணும் போதே அன்னோன் மறைந்தனன் என்றால் யார்தாம் மனம்துடி துடிக்க மாட்டார்? எல்லையில் "தமிழர் நன்மை" என்னுமோர் முத்துச் சோளக் கொல்லையில் பார்ப்பா னென்ற கொடுநரி உலவும் போது, தொல்லைநீக் கிட எழுந்த தூயரில் பன்னீர்ச் செல்வன் இல்லையேல் படைத் தலைவன் இல்லைஎம் தமிழ்வேந் துக்கே. ஆங்கில நாட்டில் நல்ல இந்திய அமைச்ச னுக்குத் தீங்கிலாத் துணையாய்ச் சென்றான் சர்.பன்னீர்ச் செல்வன் தான்மேல் ஓங்கிய விண்வி மானம் உடைந்ததோ ஒலிநீர் வெள்ளம் தூங்கிய கடல்வீழ்ந் தானோ துயர்க்கடல் வீழ்ந்தோம் நாங்கள். பண்கெட்டுப் போன தான பாட்டுப்போல் தமிழர் வாழும் மண்கெட்டுப் போமே என்னும் மதிகெட்டு மானம் கெட்டும் எண்கெட்ட தமிழர் பல்லோர் பார்ப்பனர்க் கேவ லாகிக் கண்கெட்டு வீழும் போதோ கடல்பட்ட தெங்கள் செல்வம்? சிங்கத்தை நரிய டிக்கும் திறமில்லை எனினும் சிங்கம் பொங்குற்றே இறந்த தென்றால் நரிமனம் பூரிக் காதோ? எங்குற்றான் செல்வன் என்றே தமிழர்கள் ஏங்கும் காலை இங்குற்ற பூணூல் காரர் எண்ணம்பூ ரிக்கின் றார்கள். |
||||||||
by Swathi on 25 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|