1. நல்லோர் எங்கும் தொன்றலாம்
தாமரைபொன் முத்துச் சவரம்கோ ரோசனைபால் பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வாது - ஆம்அழல்மற்று எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள் எங்கே பிறந்தாலும் என்
2. உயர்வடைய உயரிடமே சேர்க
அரிமந் திரம்புகுந்தான் ஆனை மருப்பும் பெருகொளிசேர் முத்தும் பெறலாம் - நரிநுழையில் வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின் தோலுமல்லால் வேறுமுண்டோ சொல்.
3. அறிவடையோர் பகைவனாகினும் நண்பனே
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம் சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான் முன் கொன்றதொரு வேந்தைக் குரங்கு.
4. இன்சொல்லே யாவரும் கேட்பர்
மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம் - நன்மொழியை ஓதுகுயில் ஏதங்கு உதவியது கர்த்தபந்தான் ஏதபரா தம்செய்தது இன்று
5. அன்பினால் மாற்றோரிடமும் நன்மை
பகைசேறும் எண்ணான்கு பல்கொண்டே நல்நா வகைசேர் சுவைஅருந்து மாபோல் - தொகைசேர் பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால் சுகமுறுதல் நல்லோர் தொழில்.
6. பயனற்றவை
காந்தன்இல் லாத கனங்குழலாள் பொற்புஅவமாம் சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம் - ஏந்திழையே அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம் அவமே துன்னெயிறில் லார்ஊண் சுவை.
7. கல்விக்கு இளமையே காலம்
வருந்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலலாம் வருந்த வளையாத மூங்கில் - தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாம்திரிந்து தாழும்அவர் தம்மடிக்கீழ்த் தான்.
8. இரப்பது அற்பமே
நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றுதோ காற்றணுக அஞ்சுமவன் கேட்பது அறிந்து.
9. நலமாகவாழ ஓர் பொழுதுண்க
ஓருபோது யோகியே ஓண்டளிர்க்கை மாதே இதுபோது போகியே யென்ப - திரிபோது ரோகியே நான்குபோது உண்பான் உடல்விட்டுப் போகியே யென்று புகல்.
10. எல்லாம் அறிவர் ஞானியர்
கண்ணிரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்றுவிழி எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு - நண்ணும் அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு அநந்தம் விழியென்று அறி.
11. இல்வாழ்தலே நல்வழி
உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன் பற்றிமிக வாழ்க பசுவின்பால் - பற்றி நதிகடத்தல் அன்றியே நாயின்வால் பற்றி நதிகடத்தல்உண்டோ நவில்.
12. துறந்தோரே உலகம் ஆள்பவர்
ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.
13. பாவம் பலவகையாம்
ஆன்அந் தணர்மகளிர் அன்பாம் குழந்தைவதை மானம் தெறும்பிசி வார்த்தைஇவை - மேனிறையே கூறவரு பாவம் குறையாதுஓவ் வொன்றுக்கும் நூறுஅதிகம் என்றே நுவல்.
14. இவர் இழிவினை எய்துவர்
பெற்றமைக்யும் என்னாப் பெரியோரும் பெற்றபொருள் மற்றமையும் என்றே மகிழ்வேந்தும் - முற்றியநன் மானமிலா இல்லாளும் மானமுறு வேசியரும் ஈன முறுவார் இவர்.
15. கல்விதன்மாண்பு கற்றோரே அறிவர்
கற்றோர் கனம்அறிவர் கற்றோரே கற்றறியா மற்றோர் அறியார் வருத்தமுறப் - பெற்றறியா வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம் நொந்துஅறிகு வாளோ நுவல்.
16. செயலின் முன் எண்ணுக
செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச் செய்யின் மனத்தாபம் சேருமே - செய்யவொர நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப் பொற்கொடியைச் சேர்துயரம் போல்.
17. நயமான சொல்லால் நன்மையே
நாவின் நுனியில் நயமிருக்கின் பூமாதும் நாவினிய நல்லோரும் நுண்ணுவார் - நாவின்நுனி ஆங்கடின மாகில் அத்திருவும் சேராள்முன் ஆங்கே வரும்மரண மாம்.
18. புல்லோர்க்கண் எல்லாம் நஞ்சே
ஈக்கு விடம்தலைில் எய்தும் இருந்தேளுக்கு வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே - நோக்கரிய பைங்கண்அர வுக்குவிடம் பல்அளவே துர்ச்சனருக்கு அங்கம்முழு தும்விடமே ஆம்.
19. அடங்காமை தீயவர் பண்பு
துர்ச்சனரும் பாம்பும் துலையொக்கி னும்பாம்பு துர்ச்சனரை யொக்குமோ தொகையே - துர்ச்சனர்தாம் எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி மந்திரத்தால் ஆமே வசம்.
20. அல்லோரின் சேய்மை நன்றே
கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம் வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி.
21. புல்லோரை திருத்துவது எளிதல்ல
அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச் செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ - திவ்வியநல் கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது கந்தம் கெடுமோ கரை.
22.இ ருமலும் புல்லோரும் நிகரே
துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே மன்னும் இனிமையால் மாறாகிப் - பன்னும் கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால் கடுக வசமாகை யால்.
23. புல்லோர் பண்பு
செங்கமலப் போதுஅலர்ந்த செவ்விபோ லும்வதனம் தங்கு மொழிசந் தனம்போலும் - பங்கியெறி கத்தரியைப் போலும்இளங் காரிகையே வஞ்சமனம் குத்திரர்பால் மூன்று குணம்.
24.கடையன் சொல் நிற்காது
நீசனோ நீசன் நினையுங்கால் சொல்தவறும் நீசனே நீசன் அவனையே - நீசப் புலையனாம் என்றுரைக்கும் புல்லியனே மேலாம் புலையனாம் என்றே புகல்.
25. தீயவர்தம் ஓழுக்கம் போற்றாதே
ஞானம்ஆ சாரம் நயவார் இடைப்புகழும் ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியில் பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர் மேவுநெறி யென்றே விடு.
26. கொடியவரை நல்லோர் அணுகார்
குணநன்கு உணராக் கொடியோர் இடத்தில் குணநன் குடையார் குறுகார் - குணமுடைமை நண்ணாச் சமண நகரத்தில் தூசொலிக்கும் வண்ணானுக்கு உண்டோ வழக்கு.
27. இடத்தினால் தான் சீர் சிறப்பு
ஆனை மருப்பும் அருங்கவரி மான்மயிரும் கான வரிஉகிரும் கற்றோரும் - மானே பிறந்தஇடத்து அன்றிப் பிறிதொருதே சத்தே செறிந்தஇடத்து அன்றோ சிறப்பு.
28. நிலைதவறாமை பெருமை
தலைமயிரும் கூருகிரும் வெண்பல்லும் தந்தம் நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத் தானத்தில் பூச்சியமே சாரும் நிலைதவறும் தானத்தில் பூச்சியமோ தான்.
29. ஞானியர்தம் சிறப்பு
வென்றி வரியுகிரும் வெண்கவரி மான்மயிரும் துன்றுமத யானைச் சுடர்மருப்பும் - நின்றநிலை வேறுபடி னும்சிறப்பாம் மெய்ஞ்ஞானி நின்றநிலை வேறுபடி னும்சிறப்பா மே.
30. நன்மனையாள் பண்பு
அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப் பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வன்னமுலை வேசி துயிலும் விறல்மந் திரிமதியும் பேசில் இவையுடையாள் பெண்.
31. மகளிரின் வாக்கு நிலை
பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும் பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் - பெண்முவர் பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம் பேசில்உலகு என்னாகுமோ பின்.
32. ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்
என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம் தன்னேர் திேருதத்திற் சானகியே - பின்யுகத்தில் கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில் வீடுதொறும் கூற்றுவனா மே.
33. அற்பர் நன்மை செய்யார்
கற்பூரம் போலக் கடலுப்பு இருந்தாலும் கற்பூரம் ஆமோ கடலுப்பு - பொற்பூரும் புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம் புண்ணியர்ஆ வாரோ புகல்.
34. நல்லோர் பண்பு
சீலமில்லான் ஏதேனும் செப்பிடினும் தானந்தக் காலம் இடமறிந்து கட்டுரைத்தே - ஏலவே செப்புமவ னும்தானே சிந்தைநோ காதகன்று தப்புமவன் உத்தமனே தான்.
35. ஆர்ப்பரிப்பவர் புல்லியர்
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே - வெற்றிபெறும் வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும்பொன் ஒண்கலத்தில் உண்டோ ஒலி.
36. அறம் செய்ய காலம் ஏன்
உள்ளபொழுது ஏதும் உவந்தளிப்பது அல்லாமல்ஓர் எள்ளளவும் ஈய இசையுமோ - தெள்ளுதமிழ்ச் சீரளித்தோன் உண்டநாள் சேர்மேகத் துக்கருந்த நீரளித்த தோமுந்நீர் நின்று.
37. தீயவரின் சேய்மை நன்று
பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி நீதியொடு போதல் நெறியன்றோ - காதுமத மாகரத்த யானை வழிவிலகல் புன்மலம்தின் சூகரத்துக்கு அஞ்சியோ சொல்.
38. உள்ளதும் அல்லாததும்
மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும் தந்திரமும் ஞானம் தரும்முறையும் - யந்திரமும் மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியில் பொய்யெனில் மெய்யாகிப் போம்.
39. அடிவர் வெல்ல அரிதானவர்
ஈசன்எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த நேசர்எதிர் நிற்பது அரிதாமே - தேசுவளர் செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம் தங்குமணல் நிற்கரிதே தான்.
40. அடியவர் கண்ணே கடவுள் திறம்மிகும்
முற்றும் இறைசெயலே முற்றிடினும் தன்அருளைப் பெற்றவர்தம் பாலே பெரிதாகும் - பற்றுபெருந் தாபத் திடத்தே தழன்றிடினும் நற்சோதி தீபத் திடத்தே சிறப்பு.
41. நல்லார் நினையாதவர்
கன்னியரை பொன்னாண் கழிந்தோரை மற்றயலார் பன்னியரை மாயப் பரத்தையரை - முன்னரிய தாதியரை நல்லோர் தழுவநினை யார்நரகத் தீதுவரு மென்று தெரிந்து.
42. தாயர் ஐவர்
தன்னை யளித்தாள் தமையன்மனை குருவின் பன்னி அரசன் பயில்தேவி - தன்மனையைப் பெற்றாள் இவரைவர் பேசில் எவருக்கும் நற்றாயர் என்றே நவில்.
43. குளரில் வெம்மையும் கோடையில் தண்மையும்
வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும் ஏவனைய கண்ணார் இளமுலையும் - ஓவியமே மென்சீத காலத்து வெம்மைதரும் ெம்மைதனில் இன்பாரும் சீதளமா மே.
44. இன்னாரின்னார்க்கு இவையிவை இல்லையெனல்
உற்றதொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லையாம் பற்றுசெபத் தோர்க்கில்லை பாவங்கள் - முற்றும் மவுனத்தோர்க்கு இல்லை வருகாலம் துஞ்சாப் பவனத்தோர்க்கில்லை பயம்.
45. செல்வத்தின் சிறப்பு
ஆபத்து வந்தால் அரும்பொருள் தான்வேண்டுமே ஆபத்தேன்பூமாது அருகிருந்தால் - ஆபத்து வந்தால் அவளும் மருவாமல் எப்பொருளும் அந்தோ வுடன்போம் அறி.
46. பொருளால் துன்பம்
இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே பின்னதனைப் பேணுதலும் துன்பமே - அன்னது அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்பால் இழத்தலே துன்பமேயாம்.
47. வினைப்பயன் விடாது
தானே புரிவினையால் சாரும் இருபயனும் தானே அனுபவித்தல் தப்பாது - தான்னூறு கோடிகற்பம் சென்றாலும் கோதையே செய்தவினை நாடிநிற்கும் என்றார் நயந்து.
48. ஞானிக்கு துன்பமில்லை துட்டனுக்கு இன்பமில்லை
துய அறிவினர்முன் சூழ்துன்ப மில்லையாம் காயும் விடம்கருடர்க்கு இல்லையாம் - ஆயுன்கால் பன்முகன்சேர் தீமுன் பயில்சீத மில்லையாம் துன்முகனுக்கு உண்டோ சுகம்.
49. தனித்துண்டல் தகாது
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் என்றிவரோடு இன்புறத் தானுண்டல் இனிதாமே - அன்புறவே தக்கவரை இன்றித் தனித்துண்டல் தான்கவர்மீன் கொககருந்தல் என்றே குறி.
50. அடியாரிடையே ஆண்டவன் நிலைப்பான்
இந்திரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும் இந்தரவி காந்தத் திலங்குமே - இந்திரவி ேந்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நீத்தனருள் ேந்திரத்தோர் பாலே நிறைவு.
51. ஆண்டவனை வணங்கு
தாமோ தரன்முதலேர் சாதல்நூல் சாற்றுவதும் பூமேலோர் ஒன்றுவதும் கண்டோமே - நாமுடலை நேசிப்பது என்னோ நிலையாகும் சங்கரனைப் பூசிப்ப தொன்றே புகல்.
52. இறப்பதற்கு முன் இறைவனடி தொழு
அரசின் இலையதனின் அக்கிரமத் தினின்று விரைய விழுதுளியே போலும் - புரையுடைய ஆக்கைவிடா முன்னம் அரன்பாதம் பூசித்தல் நோக்கல்நன்று என்றே நவில்.
53. உயர்ந்த பொருள்கள்
சத்தியத்தை வெல்லாது அசத்தியந்தான் நீள்பொறையை மெத்திய கோபமது வெல்லாது - பத்திமிகு புண்ணயத்தை பாவமது வெல்லாது போர்அரக்கர் கண்ணனைத்தான் வெல்லுவரோ காண்.
54. நற்புதல்வரைப் பெறுக
பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறலின்ஓர் நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே - பொற்கொடியே பன்றிபல குட்டி பயந்ததினால் ஏதுபயன் ஒன்றமையாதோ கரிக்கொன்று ஓது.
55. பெண்மனத்தையாரறிவார்
அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமும் கத்துபுனல் மீன்பதம் கண்டாலும் - பித்தரே கானார் தெரியல் கடவுளரும் காண்பரோ மானார் விழியார் மனம்.
56. யோகிககு பிணியில்லை
காளவிடப் பாந்தள் கருடனைக் கட்டுமோ வாளெரியைக் கட்டுமோ வன்கயிறு - நீளும் பவமருளும் பாசம்வெம் பஞ்சேந் திரியம் சிவயோகியைப் பிணியாவே.
57. புண்ணியமே வாழ்வு
புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தா லன்றியே மத்தமிகு பாவத்தால் வாழ்வாமோ - வித்துபயிர் தாயாகியே வளர்க்கும் தண்புனலால் அல்லாது தீயால் வளருமோ செப்பு.
58. அடியவர் பின் ஆண்டவன்
சிவனே சிவனே சிவனேயென் பார்பின் சிவனுமை யாளொடும் திரிவன் - சிவனருளால் பெற்றஇளங் கன்றைப் பிரியாமல் பின்னோடிச் சுற்றுபசுப் போல் தொடர்ந்து.
59. ஈவதை நிறுத்தாதே
தாமும்கொ டார்கொடுப் போர்தமையும் ஈயாதவகை சேமம்செய்வாரும் சிலருண்டே - ஏமநிழல் இட்டுமலர் காய்கனிகள் ஈந்துதவும் நன்மரத்தைக் கட்டுமுடை முள்எனவே காண்.
60. ஈவோர் வருந்தாமல் ஏற்றல் நன்று
ஆயுமலர்த் தேன்வண்டு அருந்துவது போலிரப்போர் ஈயுமவர் வருந்தாது ஏற்றலறம் - தூயயிளம் பச்சிலையைக் கீடமறியாப் பற்றி அரிப்பதுபோல் அச்சமுற வாங்கல் அகம்.
61. இவர் பிரிவால் இவை நீங்கும்
மாதா மரிக்கின் மகன்நாவின் நற்சுவைபோம் தாதா வெனில்கல்வி தாமகலும் - ஓதிலுடன் வந்தோன் மரித்துவிடில் வாகுவலிபோம் மனையேல் அந்தோ இவையாவும் போம்.
62. காணத் தக்கன தகாதன
ஓதுபொருள் கண்டோர்க்கு உறுமாசை நீதியிலாப் பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாம் - சீதமலர் கண்டோர்க் குறும்வாசம் மற்றமைந்த நற்றவரைத் கண்டோர்க்கு உடனாம் கதி.
63. தீயோர் செல்வம் நல்லவர்க்கு யதவாது.
பாவிதனம் தண்டிப்போர் பாலாகும் அல்லதருள் மேவுசிவன் அன்பர்பால் மேவாதே - ஓவியமே நாயின்பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே துயவருக்கு ஆகுமோ சொல்.
64. துன்பத்திலும் நல்லவர் நல்லவராவார்
பொன்னும் கரும்பும் புகழ்பாலும் சந்தனமும் சின்னம்பட வருத்தம் செய்தாலும் - முன்னிருந்த நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்பால் நற்குணமே தோன்றும் நயந்து.
65. எக்காலத்தும் பகைவராவோர்
வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும் பூசுரரும் கோழிகளும் பொன்னனையாய் - பேசில்ஓரு காரணந்தான் இன்றியே கண்டவுடனே பகையாம் காரணந்தான் அப்பிறப்பே காண்.
66. அழகைக்கொடுப்பன
அன்னமனையாய் குயிலுக்கு ஆனவழகு யின்னிசையே கன்னல் மொழியார்க்கு கற்பாமே - மன்னுகலை கற்றோர்க்கு அழகு கருணையே ஆசைசமயக்கு அற்றோர்க்கு அழகு பொறையாம்.
67. நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக
இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம் இதமெனவே கூறிலிதமன்றே - இதம்உரைத்த வாக்கினால் ஏரண்ட மாமுனியும்சோழனொடு தேக்குநீர் வீழ்ந்தொழிந்தான் சேர்ந்து.
68. மேன்மையானவர் இருவகையினர்
இத்தரையோர் தன்னில் இருவரே மேலானோர் சித்தி ரசவாதி சிவயோகி - முத்தனையாய் நல்குரவு முற்பவமும் நாசம் புரிவாரே அல்லவரே வீரியக் கீடம்.
69. ரசவாதி யோகிகளின் முக்குணங்கள்
அற்றசிவ யோகிக்கு அருஞ்சின்னம் மூன்றுண்டு பற்றலகை உன்மத்தர் பாலரியல் - முற்றிரச வாதிக்குச் சின்னம் மூன்றுண்டே மகிழ் போகம் ஈதல் இரவாகை என்று.
70. நல்லவர் தீயவர் செயல்
வல்லவர்பால் கல்வி மதம்ஆ ணவம்போக்கும் அல்லவர்பால் கல்வி அவையாக்கும் - நல்லிடத்தில் யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள் போகம் பயில்வோர் புரிந்து.
71. கற்றவராயினும் தீயோர் தீயவரே.
தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்றவரைத் துயவரேன்று எண்ணியே துன்னற்க - சேயிழையே தண்ணொளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும் நண்ணுவரோ மற்றதனை நாடி.
72. நீத்தோருக்கு உலகதுன்பமில்லை
ஊருர் யெனும்வனத்தே ஒள்வாட்கண் மாதரெனும் கூருர் விடமுட்குழாம் உண்டே - சீரூர் விரத்திவை ராக்கியவி வேகத்தொடு தோல் உரத்தணியத் தையென் றோது.
73. இவர்களுக்கு இவையில்லை
போற்று குருகிளைஞர் பொன்னசை யோர்க்கிலலை தோற்று பசிக்கில்லை சுவைபாகம் - தேற்றுகல்வி நேசர்க்கு இல்லைசுகமும் நித்திரையும் கைமுகர்தம் ஆசைக்கில்லையாம் மானம்.
74. தீயவருக்கு இடம்கொடுக்கக் கூடாது
நன்றுறியாத் தீயோர்க் கிடமளித்த நல்லோர்க்கும் துன்று கிளைக்கும் துயர்சேரும் - குன்றிடத்தில் பின்னிரவில் வந்தகரும் பிள்ளைக் கிடமகொடுத்த அன்னமுதல் பட்டது போலாம்.
75. நல்லோர் தீயவரில்பு
மனம்வேறு சொல்வேறு மன்னு தொழில்வேறு வினைவேறு பட்டவர்பால் மேவும் - அனமே மனமொன்று சொல்லொன்று வான்பொருளும் ஒன்றே கனம்ஒன்று மேலவர்தம் கண்.
76. இதற்கு இதுவழகு
கண்ணுக்கு இனிய சபைக்குமணி கற்றோனே விண்ணுக்கு இனியமணி வெய்யோனே - வண்ணநறும் சந்த முலையாள் சயனத்து இனியமணி மைநதன் மனைக்கு மணி.
77. நல்லோர் நண்ணம்பற்கு உயிருமளிப்பர்
பாலின்நீர் தீயணுகப் பால்வெகுண்டு தீப்புகந்து மேலும்நீர் கண்டமையும் மேன்மைபோல் - நூலின்நெறி உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே மற்றோர் புகல மதித்து.
78. அடிவர்பொருள் கவர்தலாகாது
அந்தோ புரமெரித்த அண்ணலடி யார்பொருள்கள் செந்தீயினும் கொடிய தீக்கண்டாய் - செந்தீயை நீங்கின் சுடாதே நெடுந்தூரம் போனாலும் ஈங்கச் சுடுமே இது.
79. தீயோர் கேண்மை தீயவே பயக்கும்
நிந்தையிலாத் துயவரும் நிந்தையரைச் சேரிலவர் நிந்தையது தம்மிடத்தே நிற்குமே - நிந்தைமிகு தாலநிழில் கீழிருந்தான் ஆன்பா லருந்திடினும் பாலதெனச் சொல்லுமோ பார்.
80. தீயவர் நற்சொல் ஏற்கார்
கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில் தன்மநூல் புக்காலும் தங்காதே - சன்மமெலும் புண்டுசமிக்கும் நாய் ஊணாவின் நெய்யதனை உண்டு சமிக்குமோ ஓது.
81. மணமகன் இவனாவான்
பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையில் கூரியநல் சுற்றமும் குலம்விரும்பும் காந்தனது பேரழுகு தான்விரும்பும் கண்.
82. விருப்பு பல்வகைத்தது
காந்தநறும் புண்ணைக் கலந்தீ விரும்புமே வேந்தர் தனமே விரும்புவர் - சாந்தநூல் கல்லார் பகைசேர் கலகம் விரும்புவர் நல்லார் விரும்புவர் நட்பு.
83. நீத்தார் நுகர்ப்பொருள் நண்ணலாகாது
மற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப் பெற்றக் கணமே பிரியுமே - கற்றருளை வேட்ட பொரியோர் பெருமையெலாம் வேறொன்றைக் கேட்ட பொழுதே கெடும்.
84. தீயொழுக்கம் தீமையே நல்கும்
சீலம் குலம்அடியாள் தீண்டின்கெடும் கணிகை ஆலிங்கனம் தனநா சமாகும் - நூலிழந்த வல்லிதழுவக்குறையும் வாழ்நாள் பிறர்தாரம் புல்லினர்க்கெல் லாநலமும் போம்.
85. உண்மையை சிலரே விரும்புவர்
சத்தயம் எக்காலும் சனவிருத்த மாகுமே எத்தயபொய் யார்க்கும் இதமாகும் - நத்தியபால் வீடுசென்று விலையாம் மதுயிருந்த வீடுதனி லேவிை லயாமே.
86. தீயொர் நண்ணிய நல்லோர்க்கும் தீமையே
நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும் நல்லொழுக்க மில்லாச்சொல் நண்ணுமே - கொல்லும்விடப் பாம்பென வுன்னாரே பழுதையே ஆனாலும் தூம்பமரும் புற்றடுத்தால் சொல்.
87. நல்லோரை அறிய வாக்கு
வாக்குநயத் தாலன்றி கற்றவரை மற்றவரை ஆக்கைநயத் தால்அறியல் ஆகாதே - காக்கையொடு நீலச் சிறுகுயிலை நீடுஇசையால் அன்றியே கோலத்து அறிவருமோ கூறு.
88. துயருண்டு இல்லத்தில்
ஆசைஎனும் பாசத்தால் ஆடவர்தம் சிந்தைதனை வீசுமனையாம் தறியில் வீழ்த்தியே - மாசுபுரி மாயா மனைவியராம் மாக்கள் மகவென்னும் நாயால் கடிப்பித்தல் நாடு.
89. தானம் மூவகை
தானறிந்தோருக் குதவி தன்னால் அமையும்எனில் தானுவந்து ஈதல் தலையாமே - ஆனதனால் சொன்னால் புரிதலிடை சொல்லியும் பன்னாள்மறுத்துப் பின்னாள் புரிவதுவே பின்.
90. மூவகையார் தன்மைகள்
உற்ற மறையகத்தின் உய்க்குமவன் உத்தமனே மற்றம் மறைபகர்வோன் மத்திமனே - முற்றிழையே அத்தம் உறலால் புகல்வான் அதமனென வித்தக நூலோதும் விரித்து.
91. மூவகையினர் ஈகைத்தன்மை
உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே - முத்தலரும் ஆம்கமுகு போல்வர் அதமர் அவர்களே தேம்கதலியும் போல்வார் தேர்ந்து.
92. உயர்ந்தோர் கைம்மாறு கருதார்
எல்லோர் தமக்கும் இனிதுதவல் அன்றியே நல்லோர் தமக்குதவி நாடாரே - வல்லதரு நாமநிதி மேகம் நயந்துதவல் அன்றியே தாமுதவி நாடுமோ சாற்று.
93. தீயோர் சொல் மிகவும் வருத்தம்
வெய்யோன் கிரணம் மிகச்சுடுமே வெய்யவனின் செய்யோன் கிரணம்மிகத் தீதாமே - வெய்யகதிர் எல்லோன் கிரணத் தெரியினிலும் எண்ணமிலார் சொல்லே மிகவும் சுடும்.
94. இனிய சொல்லே இன்பம் பயக்கும்
திங்கள் அமிர்த கிரணம்மிகச் சீதளமே திங்களினும் சந்தனமே சீதளமாம் - இங்கிவற்றின் அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம் இன்பமிகும் சீதள மாமே.
95. நீற்றின் பெருமை
சீராம் வெண்ணீற்றுத் திரிபுண்டரம் விடுத்தே பேரான முத்தி பெறவிரும்பல் - ஆரமிர்த சஞ்சீவியை விடுத்தே சாகா திருப்பதற்கு நஞ்சே புசித்ததுபோன்ம் நாடு.
96. அடியார்கள் தியானத்தில் ஆண்டவர்களை எதிர்பார்ப்பர்
செந்தாமரை யிரவி சேருதயம் பார்க்குமே சந்த்ரோ தயம்பார்க்கும் தண்குமுதம் - கந்தமிகும் பூவலரப் பார்க்கும் பொறிவண்டு அரனன்பர் தேவரவைப் பார்ப்பர் தௌிந்து.
97. மந்திரங்கள் ஐந்தெழுத்துக்கு ஓப்பாகா
வில்லம் அறுகுக்குஒவ்வா மென்மலர்கள் நால்வரெனும் நல்லன்பர் சொற்கொவ்வா நான்மறைகள் - மெல்லிநல்லாய் ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே சோமசுந்த ரற்குஎன்றே சொல்.
98. கற்றவர்க்கு நிகரில்லை
கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல் வல்லான் ஒருவனையே மானுவரோ - அல்ஆரும் எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்தோர் வெண்ணிலா ஆகுமோ விளம்பு.
99. சேர்ந்த இடத்தின் பயன்
சந்தனத்தைச் சேர்தருவும் தக்கமணம் கமழும் சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற - அந்தவனம் தானுமச் சந்தனமும் தன்னினமும் மாள்வதன்றித் தானும் கெடச்சுடுமோ தான்.
100. பெரியோரைச் சேரின் துன்பம் நீங்கும்
கங்கைநதி பாவம் சசிதாபம் கற்பகந்தான் மங்க லுறும்வறுமை மாற்றுமே - துங்கமிகும் இக்குணமோர் மூன்றும் பெரியோ ரிடம்சேரில் அக்கணமே போமென்று அறி.
|