நிலைநீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி வான்தவழ் உடற்கறை மதியெனச் சுருங்கி புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுடன் அழியும் சீறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கை கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து (5)
புலனறத் துடைத்த நலனுறு வேள்வியர் ஆரா இன்பப் பேரமுது அருந்தி துறவெனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர் வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலாப் பேரொளி நாயகன் காரொளி மிடற்றோன் (10)
மண்திரு வேட்டுப் பஞ்சவற் பொருத கிள்ளியும் கிளையும் கிளர்படை நான்கும் திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட எரிவாய் உரகர் இருள்நாட்டு உருவக் கொலைக்கொண் டாழி குறியுடன் படைத்து (15)
மறியப் புதைத்த மறம்கெழு பெருமான் நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமும் கல்வியும் திருவும் காலமும் கொடியும் மாடமும் ஓங்கிய மணிநகர்க் கூடல் ஆல வாயினில் அருளுடன் நிறைந்த (20)
பவளச் சடையோன் பதம்தலை சுமந்த நல்இயல் ஊரநின் புல்லம்உள் மங்கையர் ஓவிய இல்லம்எம் உறையுள் ஆக கேளாச் சிறுசொல் கிளக்கும் கலதியர் இவ்வுழி ஆயத் தினர்களும் ஆக (25)
மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய் முன்றிலும் எம்முடை முன்றில் ஆக மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தஇத் திருமணம் கொள்ளாச் சேக்கையது ஆக நின்வுளம் கண்டு நிகழ்உணவு உன்னி (30)
நாணா நவப்பொய் பேணியுள் புணர்த்தி யாழொடு முகமன் பாணனும் நீயும் திருப்பெறும் அயலவர் காண வரப்பெறு மாதவம் பெரிதுடை யேமே. (34)
|