பெருந்துயர் அகற்றி அறம்குடி நாட்டி உளச்சுருள் விரிக்கும் நலத்தகு கல்வியொன்று உளதென குரிசில் ஒருமொழி சாற்ற பேழ்வாய்க் கொய்யுளை அரிசுமந் தெடுத்த பல்மணி ஆசனத்து இருந்துசெவ் வானின் (5)
நெடுஞ்சடைக் குறுஞ்சுடர் நீக்கிஐந் தடுக்கிய ஆறுஐஞ் நூறொடு வேறுநிரை அடுத்த பல்மணி மிளிர்முடி பலர்தொழக் கவித்து பலதலைப் பாந்தள் சுமைதிருத் தோளில் தரித்துலகு அளிக்கும் திருத்தகு நாளில் (10)
நெடுநாள் திருவயிற்று அருளுடன் இருந்த நெடுஞ்சடை உக்கிரற் பயந்தருள் நிமலன் மற்றவன் தன்னால் வடவையின் கொழுந்துசுட்டு ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும் விளர்த்துநின் றணங்கி வளைக்குலம் முழங்கும் (15)
கருங்கடல் பொரிய ஒருங்குவேல் விடுத்து அவற்கருள் கொடுத்த முதற்பெரு நாயகன் வெம்மையும் தண்மையும் வினைஉடற்கு ஆற்றும் இருசுடர் ஒருசுடர் புணர்விழி ஆக்கிமுன் விதியவன் தாரா உடலொடு நிலைத்த (20)
முத்தமிழ்க் கூடல் முதல்வன் பொற்றாள் கனவிலும் காணாக் கண்ணினர் துயரும் பகுத்துண்டு ஈகுநர் நிலைத்திரு முன்னர் இல்லெனும் தீச்சொல் இறுத்தனர் தோமும் அனைத்துயிர் ஓம்பும் அறத்தினர் பாங்கர் (25)
கோறலென் றயலினர் குறித்தன குற்றமும் நன்றறி கல்வியர் நாட்டுறு மொழிபுக்கு அவ் அரண் இழந்தோர்க்கு அருவிடம் ஆயதும் ஒருகணம் கூடி ஒருங்கே இருசெவி புக்கது ஒத்தன இவட்கே. (30)
|