'ஜில்லி! ஜில்லி!'
சாரு அன்றிரவு நன்றாய்த் தூங்கவில்லை. இரண்டு மூன்று தடவை விழித்துக் கொண்டு, "தாத்தா! பொழுது விடிந்துடுத்தோ?" என்று கேட்டாள்.
உமாவோ இராத்திரி தூங்கவேயில்லையென்று சொல்லலாம். வெகு நேரம் வரையில், குழந்தைக்கு என்னென்ன உடைகள் வாங்குவது, என்னென்ன ஆபரணங்கள் அணிவிப்பது, எந்தப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது, எப்படி எப்படியெல்லாம் வளர்ப்பது என்று யோசனையில் ஆழ்ந்திருந்தாள். இரவு சுமார் இரண்டு மணிக்குத் தூங்கியவள் அதிகாலையில் எழுந்திருந்து, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்குமென்று ஜன்னலண்டை வந்து பார்த்தாள். 'சரி, வெள்ளி முளைத்துவிட்டது; இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் பொழுது விடிந்து விடும். சாருவை அழைத்து வர வண்டி அனுப்ப வேண்டும்' என்று எண்ணினான்.
சாருவை விட்டு இனி மேல் தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று உமா தீர்மானித்துக் கொண்டாள். அவளை இனி மேல் தன்னுடன் வைத்துக் கொண்டு தான் வளர்க்க வேண்டும். ஆனால், இந்த எண்ணம் எப்படி நிறைவேறும்? அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடலாமா? அதை நினைத்தால் உமாவுக்குப் பயமாயிருந்தது. தன்னுடைய செய்கைகளை அவர் ஒப்புக் கொள்வாரா? பாவி, பதிதை என்று நிராகரிக்க மாட்டாரா? எப்படியும் ஒன்று நிச்சயம்; தான் யார் என்று தெரிந்தால், உடனே இனிமேலாவது புருஷனுடன் வாழ்ந்திரு என்று தான் உபதேசிப்பார் - முடியாது, முடியாது!
ஆகவே, தான் யார் என்று அப்பாவிடம் தெரிவிக்கும் விஷயம் யோசித்துத் தான் செய்ய வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும். இது எப்படிச் சாத்தியம்? - குழந்தையை நம்முடன் விட்டு வைக்கச் சம்மதிப்பாரா? - ஏன் மாட்டார்? அவருக்கு என்ன பாத்தியதை குழந்தையின் மேல்? - ஆறு வருஷம் வளர்த்தால் குழந்தை அவருடையதாகி விடுமா? - "இந்த ஐசுவரியத்தையெல்லாம் குழந்தைக்குக் கொடுக்கிறேன்; என்னோடே இருக்கட்டும்" என்று சொன்னால், வேண்டாம் என்று சொல்வதற்கு இவர் யார்?-போதும், போதும். என்னை இவர் வளர்த்துப் பாழுங் கிணற்றில் தள்ளினாரே, அது போதும்! சாருவையும் வளர்த்து அப்படித் தானே செய்வார்? - இம்மாதிரியெல்லாம் எண்ணி எண்ணி அவள் உள்ளம் அலைந்து கொண்டிருந்தது.
கடைசியாகப் பொழுது விடிந்தது. வண்டியும் சாவடிக் குப்பத்துக்குப் போயிற்று. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சம்பு சாஸ்திரியும் சாருவும் 'வஸந்த விஹார'த்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
உமா பங்களாவின் வாசலில் காத்திருந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். பங்களா, தோட்டம் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டினாள். தோட்டத்திலிருந்த புஷ்பச் செடிகள் சாருவின் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்தச் செடிகளை விட்டு வருவதற்கே சாருவுக்கு மனம் வரவில்லை.
கடைசியாக, பங்களாவின் டிராயிங் ரூமில் வந்து உட்கார்ந்தார்கள்.
சாஸ்திரி உபசாரமாக, "பங்களாவும் தோட்டமும் ரொம்ப அழகாயிருக்கு. மயன் மாளிகையிலே துரியோதனன் தரையை ஜலமென்றும், ஜலத்தைத் தரையென்றும் நினைச்சுண்டு திண்டாடினானே, அந்த மாதிரி நானும் திண்டாடிப் போய்ட்டேன்" என்றார்.
உமா, "ஆமாம் சாஸ்திரிகளே! இவ்வளவு பெரிய பங்களாவிலே நான் ஒண்டிக்காரி தனியாயிருக்கேன், எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும், பார்த்துக்குங்கோ!" என்றாள்.
அதற்கு சாஸ்திரி, "உலகமே இப்படித் தான் இருக்கு, அம்மா! சில பேர் இருக்க இடமில்லாமே திண்டாடறா; சில பேர் இருக்கிற இடத்தை என்ன செய்யறதுன்னு தெரியாமே திண்டாடறா" என்றார்.
|