|
||||||||
தேசீய கீதங்கள் - பாரத நாடு பகுதி - 1 |
||||||||
1. வந்தே மாதரம்
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு( ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி)
பல்லவி
வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)
சரணங்கள்
1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
2. ஜய வந்தே மாதரம்
ராகம்-ஹிந்துஸ்தானி பியாக்தாளம்-ஆதி
பல்லவி
வந்தே- மாதரம்- ஜய
வந்தே மாதரம் (வந்தே)
சரணங்கள்
1. ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)
2. ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)
3. நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)
4. ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம் (வந்தே)
3. நாட்டு வணக்கம்
ராகம்--காம்போதி தாளம்-ஆதி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? 1
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? 2
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? 3
4. பாரத நாடு
ராகம்-ஹிந்துஸ்தானி தோடி
பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு
சரணங்கள்
1. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
2. தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)
3. நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
4. ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)
5. வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
6. யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
7. ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
8. தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
5.பாரத தேசம்
ராகம்--புன்னாகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்
சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)
2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத)
3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். (பாரத)
4. முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே (பாரத)
5. சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் (பாரத)
6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் (பாரத)
7. காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் (பாரத)
8. பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்
பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். (பாரத)
9. ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
10. குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். (பாரத)
11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். (பாரத)
12. காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். (பாரத)
13. சாதி இரண்டொழிய வேறில்லையென் றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். (பாரத)
6. எங்கள் நாடு
ராகம்-பூபாளம்
மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1
மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே 2
இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே 3
7.ஜய பாரத!
1. சிறந்து நின்ளற சிந்தை யோடு
தேயம் நூறு வென் றிவள்
மறந்த விர்ந்தந் நாடர் வந்து
வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீர மிக்க
ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விர்க்கி லாது நிற்கும்
அன்னை வெற்றி கொள்கவே!
2. நூறு கோடி நூல்கள் செய்து
நூறு தேய வாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு
தேடி வந்த நாளினும்
மாறு கொண்டு கல்வி தேய
வண்மை தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கும் உண்மை யொன்று
இறைஞ்சி நிற்பள் வாழ்கவே!
3. வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய்
மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல்கெ டாது காப்பள்
வாழி அன்னை வாழியே!
4. தேவ ருண்ணும் நன்ம ருந்து
சேர்ந்த கும்பம் என்னவும்
மேவு வார்க டற்க ணுள்ள
வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சி னோர் நிதம்
பறித்தல் செய்வ ராயினும்
ஓவி லாத செல்வம் இன்னும்
ஓங்கும் அன்னை வாழ்கவே!
5. இதந்த ரும்தொ ழில்கள் செய்து
இரும்பு விக்கு நல்கினள்
பதந்த ரற் குரிய வாய
பன்ம தங்கள் நாட்டினள்
விதம்பெ றும்பல் நாட்டி னர்க்கு
வேறொ ருண்மை தோற் றவே
சுதந்தி ரத்தி லாசை இன்று
தோற்றி னாள்மன் வாழ்கவே!
1. வந்தே மாதரம் |
||||||||
by C.Malarvizhi on 22 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|