|
||||||||||||||||||
அமெரிக்க ஆரம்பக்கல்வி - 6 |
||||||||||||||||||
சமீபத்தில் என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அவருடைய நான்கு வயது மகன் விளையாடிக்கொண்டிருந்தார். அந்த விளையாட்டு பொருள் அமெரிக்க வரைபடத்தை மாநில வாரியாக பிரித்து, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல தரைவழியாக, வான்வழியாக எவ்வளவு நேரம், தூரம் என்ற விபரங்களுடன் இருந்தது. என் நண்பரின் மாமா நியூயார்க் மாநிலத்தில் இருந்து ஜார்ஜியா மாநிலத்திற்கு செல்ல எவ்வளவு நேரமாகும்? என்று காண்பிக்கச் சொன்னவுடன், அந்த குழந்தை நியூயார்க் என்பது NY என்பதையும், ஜார்ஜியா என்பது GA என்பதையும் கண்டுபிடித்து வான்வழி என்ற பொத்தானை அமுக்கியவுடன் அது எவ்வளவு நேரம் என்பதை சொல்கிறது. இங்கே NY ,GA என்பது எந்த மாநிலங்கள் என்பதையும், அவை வரைபடத்தில் எங்கே உள்ளது என்பதையும், அதன் இடைப்பட்ட தூரத்தையும் இளவயதிலேயே விளையாட்டாகக் கற்றுக்கொள்கிறார்கள். இதில் குழந்தைகளுக்கு எவ்வித கசப்போ, சலிப்போ ஏற்படுவதில்லை. மற்றொரு நண்பர் சமீபத்தில் தன குழந்தையின் வீட்டுப்பாடம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அதில் அவர் மகளுக்கு சர் ஐசக் நியுட்டன் என்று தலைப்பு கொடுத்திருந்தார்கள். அதாவது மூன்று மாதங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் அக்குழந்தை அது குறித்த தகவல்களை திரட்ட வேண்டும். உதாரணமாக, அந்தக் குழந்தை நியுட்டனைப் போல உடையணிந்து செல்ல வேண்டும். தன்னை நியுட்டனாக நினைத்து வேலை தேட பயோடேட்டா தயாரிக்க வேண்டும். அதில் அவரின் படிப்பு, கண்டுபிடிப்பு, அனுபவம் போன்றவை இடம்பெறும். மேலும் நியுட்டனைப்போல டைரி எழுத வேண்டும். அதில் கண்டுபிடிப்பு அனுபவங்கள் இடம்பெற வேண்டும். இது சம்பந்தமாக குழந்தைகள் அருகில் உள்ள நூலகத்தில் புத்தகங்கள் எடுத்துப் படித்திருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றாக அந்த நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துப் படித்ததற்கான பதிவுகளை சமர்பிக்க வேண்டும். இங்கு நூலகம் செல்லும் பழக்கத்தை, ஆர்வத்தை சிறுவதிலேயே கல்வித்திட்டம் மூலம் ஊக்குவிக்கிறார்கள். மூன்று வயதிற்கு பிறகு அமெரிக்க குழந்தைகள் பால்வாடி (pre - school) யில் படிக்க அனுப்புகிறார்கள். அங்கு அடிப்படை விஷயங்கள், குழந்தைகளுடன் பழகுவது, குழந்தைகளின் ஆர்வத்தை கண்டறிவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். பின்னர், ஐந்து வயதிற்கு பிறகு கின்டர் கார்டன் (KG) அனுப்புகிறார்கள். ஆறு வயது நிறம்பியவுடன் முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள். முதல் வகுப்பில் இருந்து 6 - ம் வகுப்பு வரையில் ஆரம்பப் பள்ளியிலும் (Elementary school), 7 மற்றும் 8 - ம் வகுப்புகள் நடுநிலை பள்ளியிலும் (Middle school), 9 முதல் 12 - ம் வகுப்பு வரை உயர்நிலை பள்ளியிலும் ( High School ) படிக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும், ஒரு ஆசிரியருக்கு 20 முதல் 25 குழந்தைகள் இருக்கிறார்கள் 5 -ம் வகுப்பு வரை ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் எனவும், அவரே அனைத்து பாடங்களையும் நடத்துபவராகவும் இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறந்து ஒரு மாதம் கழிந்து பாடத்திட்ட இரவு ( CURRICULAM NIGHT ( OR ) OPEN HOUSES ) என்று பள்ளியில் ஓர் நிகழ்ச்சி வைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குழந்தையின் அப்பா, அம்மா இருவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வரவேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களும் வந்திருப்பார்கள். கடந்த ஒரு மாதமாகக் குழந்தைகள் வரைந்த ஓவியம், அவர்களின் எழுத்து ஆகியவை வகுப்பு சுவற்றில் ஒட்டி வைத்திருப்பார்கள். ஒரு வகுப்பின் ஆசிரியர்கள் அந்த ஆண்டு குழந்தைகளுக்கு என்ன நடத்த இருக்கிறார்கள். என்ன விதமான வீட்டுப்பாடம் இருக்கும் போன்றவைகளை பெற்றோர்களுக்கு விளக்குவார்கள். இந்நிகழ்ச்சி, பெற்றோரும் ஆசிரியரும் சேர்ந்து அந்த ஆண்டின் பாடத்திட்டத்தைத் திட்டமிடுவதாக அமையும். ஒவ்வொரு குழந்தைக்கும் தனி மேசை, நாற்காலி இருக்கும். அவர்கள் அந்த இடத்தில்தான் தினமும் அமரவேண்டும்.
ஒவ்வொரு வகுப்பிலும் தொலைக்காட்சி, டிவிடி பிளேயர், புரஜக்டர், கணிப்பொறிகள், பாடம் நடத்துவதற்கு தேவையான அச்சடித்த படங்கள், பாடங்கள் (VISUAL AIDS) மற்றும் ஓர் சிரிய நூலகம் ஆகியவை இருக்கிறது. வகுப்பரை நூலகம், பள்ளி நூலகம், மாவட்ட பொது நூலகம் (COUNTY PUBLIC LIBRARY) என பல்வேறு நூலக வசதிகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்கிறது.ஒவ்வொரு மாதமும் பள்ளியிலிருந்து செய்திப் பத்திரிகை (NEWS LETTER) வெளிவருகிறது. அதில் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள், முக்கிய தேதிகள் போன்ற பல்வேறு தகவல்கள் இடம் பெறுகின்றன. குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியின் பல்வேறு வேலைகளை தன்னார்வலர்களாக முன்வந்து செய்கிறார்கள். இந்த தன்னார்வலர்களின் உதவி இல்லையெனில் பள்ளிகளின் நிர்வாகச் செலவு பலமடங்கு அதிகமாக இருக்கும். பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள். குழந்தைகளின் அம்மாக்கள் ஒவ்வொரு நாளும் ஒரு அம்மா தன்னார்வலர்களாக ஆசிரியருக்கு உதவியாக இருக்கிறார்கள். மேலும் மதிய உணவு நேரத்தில் குழந்தைகளைக் கவனித்துகொள்ளும் அம்மாக்களை லஞ்ச் மாம் (LUNCH MOM) எனவும், நூலக தன்னார்வல அம்மாக்களை லைப்ரரி மாம் (LIBRARY MOM) எனவும், குழந்தைகளுக்கு செஸ் சொல்லிக்கொடுக்கும் அம்மாக்களை செஸ் மாம் (CHESS MOM) எனவும்,கணக்கு சொல்லித்தரும் அம்மாக்களை மேக்ஸ் மாம் (MATHS MOM) எனவும், குழந்தைகளின் பல்வேறு பங்களிப்பு செய்கிறார்கள். இது மட்டுமின்றி குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களின் துறை சார்ந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள, தேவைப்படும்போது பள்ளிகளால் அழைக்கப்படுகிறார்கள்.
என் நண்பர் ஒருவரின் மகன் நான்காம் வகுப்பு படிக்கிறார். அவரின் சமூக அறிவியல் பாடத்தில் இந்தியாவைப்பற்றி ஒரு பாடம் இருக்கிறது. அதை குழந்தைகளுக்கு விளக்குவதற்காக இந்தியரான என் நண்பரைப் பேச அழைத்திருந்தார்கள். அவரும் இந்தியா சம்பந்தமான பொருட்கள், படங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு விளக்கியதாகக் கூறினார். இதே போல் பலதுறை சார்ந்தவர்களையும் பள்ளிக்கு அழைத்து அவர்கள் வேலை சம்மந்தமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளச் செய்கிறார்கள். உதாரணமாக, தீயணைப்புத் துறை, வனத்துறை , அஞ்சல்துறை ஆகியோரை பேசச் சொல்கிறார்கள். மேலும் குழந்தைகளை கண்காட்சி, தீயணைப்பு நிலையம், பலசரக்குக் கடை போன்ற இடங்களுக்கு பள்ளி நேரத்தில் அழைத்துச்சென்று அதுகுறித்து விளக்குகிறார்கள். குழந்தைகள் வெளியில் செல்லும்போது ஒரு சில பெற்றோர்களும் தன்னார்வலர்களாக கலந்துகொண்டு பள்ளிக்கு உதவியாக செயல்படுகிறார்கள்.
முதலாம் வகுப்பில் தொடங்கி ஒவ்வொரு வகுப்பிலும் நன்றாகப் படிக்கும் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடன் அவர்களுக்கு அதிகப்படியான பாடங்களைத் தனிவகுப்பில் சொல்லிக் கொடுப்பதற்காக கிப்டட் அன்டு டேலேண்டட் புரக்ராம் (Gifted And challenge (GTC) Program) என்ற பெயரில் தேர்வு செய்து நடத்துகிறார்கள். சுமார் 50 குழந்தையில் 5 அல்லது 6 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு சாதாரண பாடத்தோடு சவால் நிறைந்த பாடங்களையும் நடத்துகிறார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தனி ஆசிரியர்களிடம் இவ்வித ஜிடிசி வகுப்புகளைக் கற்கிறார்கள்.
உடல்நலம் பாதித்த குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் பள்ளிகள், வகுப்பறைகள் இருக்கின்றன. உதாரணமாக, சக்கர நாற்காலியில் வரும் மாணவர்கள் தாங்களாகவே வகுப்பறைக்குள் வருவதற்குத் தக்க வகையில் தானியங்கிக் கதவு, லிப்ட் போன்ற வசதிகளுடன் பள்ளிகள் இயங்குகின்றன.
அமெரிக்க பள்ளி ஆசிரியர்களின் பெரும்பாலானவர்கள் இத்தொழிலை விரும்பி செய்கிறார்கள்.மேலும் கல்வி செயல்முறை நிறைந்ததாக, படைப்பாற்றலை உருவாக்குவதாக இருக்கிறது. நம்மூரில் கல்வி குழந்தைகளுடன், அவர்களின் விருப்பத்துடன் ஓட்டிச் செல்லாமல் அன்னியப்பட்ட விஷயமாக வேண்டா வெறுப்பாக திணிக்கப்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு சிறிய வயதில் மிகவும் சிரமமான விஷயமாக, பிடிக்காத விஷயமாக கருதி பெரும்பாலான குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். இன்றைய நம் கல்வி முறையில் தேர்வு பயத்தினால் ஏற்படும் மன உலைச்சல் நாளுக்குநாள் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7000 மாணவர்கள் தேர்வு பயத்தால் / தேர்வு முடிவால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்விற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமும், அதில் தோல்வியுற்றால் அந்த மாணவன் அல்லது மாணவி வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டதாக கருதுவதும் மிகவும் வேதனைக்குரிய விஷயங்களாகும். இன்றைய பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் முயன்று முடியாமல் போன அத்துனை விஷயங்களையும் தங்கள் குழந்தைகளின்மூலம் சாதிக்க நினைப்பது மிகவும் அபத்தமான விஷயமாக இருக்கிறது, அமெரிக்க கல்வியை எடுத்துக்கொண்டால், உதாரணமாக நேரம் பார்ப்பதை சொல்லிக்கொடுக்க வேண்டுமென்றால் முதல்நாள் கடிகாரத்தை வரைந்து வண்ணம்(COLOR) கொடுக்கச் சொல்கிறார்கள், பிறகு அந்த படத்துடன் அவர்கள் பரிச்சயமானவுடன் நேரம் பார்ப்பதைப் பற்றி விளக்கும் போது குழந்தைகளால் சுலபமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இங்கு விளையாட்டாகவே மாணவர்கள் பல்வேறு நடைமுறை விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள்.
-தொடரும் ச.பார்த்தசாரதி |
||||||||||||||||||
by Swathi on 21 Jan 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|