கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 700 திரையரங்குகளில் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.
லிங்கா படம் பற்றி இது வரை வெளியான தகவல்களின் தொகுப்பு இதோ,
சூப்பர் ஸ்டாரின் தமிழ் சினிமா பயணத்தில் நாளை வெளியாக இருக்கும் லிங்கா திரைப்படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால் ரஜினி நடிக்க வந்ததில் இருந்து இதுவரை ஒரு படம் கூட அவரது பிறந்தநாளில் ரிலீஸ் ஆனது இல்லை. இந்நிலையில் தான் முதல்முறையாக ரஜினியின் பிறந்தநாள் அன்று லிங்கா ரிலீஸாக உள்ளது.
ரஜினி இதற்கு முன் நடித்த கோச்சடையான் படம் அனிமேஷன் படமாக அமைந்து விட்டதாலும், அதில் நிஜ ரஜினியை பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் ஏங்கியதாலும் சூப்பர் ஸ்டாரின் திட்டப்படி, வேகப்படி 6 மாத்துக்குள் முடிக்கப்பட்டு படம் வெளிவருகிறது.
ரஜினிகாந்த் இதற்கு முன் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா என்ற இரண்டு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனால் ரவிக்குமார் - ரஜினி மூன்றாவது முறையாக சேர்ந்துள்ள லிங்கா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் குட்டி ஜமீன்தார் மாதிரி இருப்பார். அணை கட்டும் இன்ஜினீயர். முறுக்கிய மீசை, சுருள்முடி கொண்ட தோற்றம். இவர் 100 சதவிகிதம் நல்லவர். 1940 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையில் வருகிறார். அடுத்த ரஜினி தாதா மாதிரி தலையில் கட்டிய ரிப்பன், பரட்டை தலை, விதவிதமா உடைகள் கொண்ட கேரக்டரில் இளைஞர்களைக் கவர்வார். இவர் 25 சதவிகிதம் நல்லவர் 75 சதவிகிதம் வில்லன்.
கதை:
50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர்ப் பஞ்சம் வருகிறது. அதைப் போக்குவதற்காக கலெக்டர் ரஜினி இன்ஜினீயராகி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கிறார். அப்போது சமூக விரோதக் கூட்டம் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது. ''எனக்கு இந்துவும் வேணாம், கிறித்தவரும் வேணாம். முஸ்லிமும் வேணாம். செட்டியார், முதலியார், நாடார் வேணாம். இந்தியனா இருக்குறவங்க மட்டும் என் கூட வாங்க '' என்று ரஜினி அழைக்கிறார். மக்கள் படை திரண்டு வருகிறது. அவர்களோடு இணைந்து அணை கட்டுகிறார்.
ஊர் நாட்டாமை விஜயகுமார் ரஜினியை நினைத்துப் பெருமைப்படுகிறார். அணை கட்டுவதற்கு உதவியாகவும், ரஜினிக்கு ஆறுதலாகவும் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா சந்தோஷப்படுகிறார். அப்போதுதான் நடக்கக்கூடாத அந்த விபரீதம் நடக்கிறது. ஆங்கிலேயருக்குக் கைத்தடியாக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன் அணை திறப்பு விழாவிற்கு வரும் ரஜினியை அவமானப்படுத்துகிறார். இதனால், மனம் கலங்கும் ரஜினி அணை திறக்காமலேயே சென்றுவிடுகிறார். ரஜினியுடன் சோனாக்ஷி சின்ஹாவும், சோனாக்ஷி தந்தை ராதாரவியும் சென்றுவிடுகிறார்கள்.
அதற்குப் பிறகு அந்த அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.
அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. எந்த இடத்தில் வைரம் கிடைத்தாலும் அதைக் கொள்ளையடித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். அவரை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அணை வழியாக வரும் ரஜினி அங்கேயே தலைமறைவாகி விடுகிறார். அப்போதுதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒளிந்திருந்து வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவதைக் கண்டுபிடிக்கிறார். அந்த சமயத்தில் பெரியவர் ரஜினியை சந்திக்கிறார். மனம் திருந்துகிறார்.
பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டுக் மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை .
அரசியல் இல்லை... விழிப்புணர்வு இருக்கிறது :
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வந்தாலும் படத்தில் அரசியல் கலப்பு கொஞ்சமும் கிடையாது. வசனத்திலும் அரசியல் கிடையாது. தண்ணீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம். நீர்பாசன மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு மட்டுமே படத்தில் இருக்கும்.
சூப்பர் ஸ்டாரின் ஸ்பெஷலான பன்ஞ் டயலாக் எதுவும் இதில் இல்லை. ஆங்காங்கே அட்வைஸ் பாணியிலான சில வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.
"அதிகாரம் ஒரு போதை அது தலைக்கு ஏறாமல் பார்த்துக்கோ",
"அளவோடு சாப்பிடுறவனும், அளவோடு பேசுறவனும், கெட்டுப்போக மாட்டான்".
"பணத்தை மட்டுமில்ல மழை நீரையும் சேமித்து வை".
"வாழ்க்கையில எதுவும் ஈசியில்லை. முயற்சி பண்ணா எதுவும் கஷ்டமில்லை" இப்படி பல வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது.
ஹீரோயின்களாக நடித்திருக்கும் சோனாக்ஷியும், அனுஷ்காவும் 6 உயர நடிகைகள். சோனாக்ஷி பீரியட் கதையில் ரவிக்கை அணியாமல் நடித்திருக்கிறார். அனுஷ்கா நிகழ்கால கதையில் மார்டன் பொண்ணாக நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்கு இதில் ஓப்பனிங் சாங் இருக்கிறது. முதன் முதலில் ரஜினியின் ஓப்பனிங் சாங் வெளிநாட்டில் எடுத்திருப்பதும் லிங்காவுக்காகத்தான்.
ரஜினிக்கு வயதான கெட்அப் எதுவும் இல்லை. இரண்டுமே யூத்தான கேரக்டர்கள்தான். ஒரே ஒரு காட்சியில் மட்டும் பீரியட் கதை ரஜினி நிகழ்காலத்தில் வயதானவராக வருவார் என்றும் கூறுகிறார்கள்.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எதையும் பயன்படுத்தாமல் ஒப்பனை மூலம் மட்டுமே ரஜினி இளமையாக்கப்பட்டிருக்கிறார். ஆக்கியவர் மேக்அப் உமன் பானு.
ஒரு அணை, ஒரு கோவில், ஒரு ரெயில் நிலையம், ஒரு பழங்கால ரெயில், ஒரு அரண்மணை ஆகியவை லிங்காவுக்காக போடப்பட்ட செட்டுகள். பாட்டுக்காக போடப்பட்டது தனி. செட் போடுவதற்காக மட்டும் தினமும் 1500 பேர் பணியாற்றி உள்ளனர்.
லிங்கா ஷூட்டிங் நடந்தது. மொத்தம் 120 நாட்கள். அதில் பாதி நாட்களுக்குமேல் மழையில்தான் நடந்தது. ஆனால் ஒரு காட்சியில்கூட மழை பெய்ததற்கான அடையாளத்தை காண முடியாது.
படத்தில் வரும் ரயில் சண்டை ஒன்று ஹாலிவுட் படத்துக்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹாலிவுட் சண்டை இயக்குனர் லீ விட்டோகர் வரவழைக்கப்பட்டிருந்தார். ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சண்டை வடிவமைக்கும் அவர்தான் இந்த ரெயில் சண்டையை வடிவமைத்திருக்கிறார்.
பொதுவாக பிளாஷ் பேக் காட்சிகளுக்கு கருப்பு வெள்ளை அல்லது சிபியா கலரை பயன்படுத்துவார்கள். லிங்காவில் வித்தியாசமான ஒரு வண்ணத்தை பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு.
ஒவ்வொரு படத்திலும் ரஜினி ஒரு புது ஸ்டைலை அறிமுகப்படுத்துவார். இதில் அப்படி ஒரு ஸ்டைல் வருகிறது. அதனை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
தற்போது எல்லாம் பெரிய நடிகர்களின் படம் ரிலீஸாகும் முன்பு அந்த கதை தன்னுடையது என யாராவது வழக்கு தொடர்கிறார்கள். லிங்காவும் அந்த தடைகற்கள் வந்தது.. ஆனால் அந்த தடைகற்கள் நீதிமன்றத்தால் தவிடு பொடியானது.
லிங்கா திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 700 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் 200 திரையரங்குகளில் ‘லிங்கா’ திரையிடப்பட உள்ளதாம்.
லிங்கா சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி 32 கோடி கொடுத்து பெற்றிருக்கிறது.
ஈராஸ் நிறுவனம் 'லிங்கா' பட உரிமையை 165 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம். ’லிங்கா’ படத்ததை தமிழ் நாட்டின் ரிலீஸ் உரிமத்தை வேந்தர் மூவீஸ் பெற்றுள்ளது.
|