1 கத்தரித் தோட்டத்து மத்தியில் நின்று காவல் புரிகின்ற சேவகா – நன்று காவல் புரிகின்ற சேவகா மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறுயார் - உன்னைப் போல் வேலை புரிபவன் வேறுயார்?
2 கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல் காவல் புரிகின்ற சேவகா – என்றும் காவல் புரிகின்ற சேவகா எண்ணி உன்னைப் போல் இரவு பகலாக ஏவல் புரிபவன் வேறுயார்? – என்றும் ஏவல் புரிபவன் வேறுயார்?
3 வட்டமான பெரும் பூசினிக் காய் போல் மஞ்சள் நிற உறுமாலைப்பார் - தலையில் மஞ்சள் நிற உறுமாலைப்பார்! கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே கைகளில் அம்பொடு வில்லைப்பார் - இரு கைகளில் அம்பொடு வில்லைப்பார்!
4 தொட்டு முறுக்காத மீசையைப்பார் - கறைச் சோகி போலே பெரும் பல்லைப்பார் - கறைச் சோகி போலே பெரும் பல்லைப்பார்! கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய கட்டை உடைவாளின் தேசுபார் - ஆகா கட்டை உடைவாளின் தேசுபார்!
5 பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும் பொல்லாத பார்வையும் கண்டதோ? – உன்றன் பொல்லாத பார்வையும் கண்டதோ? வாட்ட மில்லாப் பயிர் மேய வந்த பசு வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே – வெடி வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே
6 கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக் கண்டு கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக் கத்திக் கத்திக் கரைந் தோடுமே நள்ளிரவில் வருகள் வனுனைக் கண்டு நடு நடுங்கி மனம் வாடுமே – ஏங்கி நடு நடுங்கி மனம் வாடுமே
7 ஏழைக் கமக்காரன் வேலைக் குதவி செய் ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல ஏவற்காரன் நீயே யென்னினும் ஆளைப் போலப் போலி வேடக்காரன் நீயே ஆவதறிந்தன் னுண்மையே – போலி ஆவதறிந்தன் னுண்மையே
8 தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித் துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத் துண்ணென் றிடித்த தென் நெஞ்சகம் சேரச் சேரப் போலி வேடக்காரனென்று தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று தெரிய வந்ததுன் வஞ்சகம்
9 சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதை போல் தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத் தேசத்திலே பலர் உண்டு காண் அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா அறிவு படைத்தனன் இன்று நான் - உன்னில் அறிவு படைத்தனன் இன்று நான்.
|