|
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன் |
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – ராஜேந்திரன் புதையலை கண்டுபிடிக்கும் வாசிப்பு: குழந்தைகளுக்காக இயங்கும் ஆசிரியராக செயல்படுகிறார் ராஜேந்திரன் அவர்கள். கேரள மாநிலத்தில் 34 ஆண்டுகள் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். குழந்தைகளுடைய ஆர்வத்தைத் தூண்டுவதாகவே கல்விமுறை அமைய வேண்டும், மாறாக கல்வியின் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்பட வைப்பதாக கல்விமுறை இருக்கக் கூடாது எனக் கூறுகிறார். ‘கருப்பு மை புரண்ட எழுத்துக்களுள் புதைநதிருக்கும் புதையலை கண்டுபிடிப்பதே வாசிப்பு” என்கிறார். அந்த புதையலை குழந்தைகள் தானாக கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே நீள்கதை பாடத் தொகுப்பு. நீள்கதை பாடத் தொகுப்பு: நீள்கதை பாடத் தொகுப்பில் ஒரு கதையானது ஒரு வருடம் வரை நீளும் தன்மை கொண்டு காணப்படும். பகுதி பகுதியாக கதையானது வாசிக்கப்படும். ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஒரு ஆச்சரியத்துடன் அல்லது எதிர்பார்ப்புடன் அல்லது ஒரு கேள்வியுடன் கதையானது நிறுத்தப்படும். இதனால் குழந்தைகளுக்கு அதன் அடுத்தப்பகுதியை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இதனால் கல்வியை ஒரு சுமையாக குழந்தைகள் கருத மாட்டார்கள். இதை ராஜேந்திரன் அவர்கள் அனுபவாPதியாகவும் உணர்ந்துள்ளார். குழந்தைகளுக்கேற்ற முறை: ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஒரு முறையிலேயும், ஆறாம் வகுப்பிலிருந்து பயிலும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்ற முறையிலேயும் இந்த நீள்கதை பாடத் திட்டம் அமையும். ஆறாம் வகுப்பிற்கு மேல் செயல்பாட்டு முறையில் கதைகள் அமையும். ஒரு கதை முடிந்த பிறகு, அதில் அக்குழந்தைகளுக்கு பிடித்த பகுதி என்ன, அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரம் என்ன, வர்ணணைகள் என்னென்ன,. இந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் போன்றவை கேட்கப்பட்டு விவாதிக்கப்படும் மேலும் கதையின் அடுத்த பகுதி என்னவாக இருக்கும் என்பதையும் குழந்தைகளையே யோசித்து சொல்ல வைப்பதாக இப்பாடத் திட்டம் அமையும் என்கிறார். ஆசிரியர்களின் பங்கு: ஆசிரியர்கள் ஒரு பாடத்தைத் தொடங்கும் முன் குழந்தைகளை அவர்களிடையே ஈர்க்க வேண்டும். தடைகளை உருவாக்கி அவர்களை தகர்த்தெறிய வைக்க வேண்டும். உதாரணமாக, ‘இந்த புத்தகத்தில் இந்த பாடத்தை மட்டும் படிக்காதீர்கள்’ என்று கூறும் போது அக்குழந்தைகள் உடனே அந்த பாடத்தை தான் படிப்பார்கள். இது போன்ற தடைகளை உருவாக்க வேண்டும். தடைகளை உருவாக்ககுவதில் தான் ஆசிரியர்களின் திறமை இருக்கிறது. விளக்கி கூறுபவர் ஆசிரியர் அல்ல. சுவாராசியத்தை உருவாக்குபவரே ஆசிரியர். ஒளித்து வைப்பவர்கள் ஆசிரியர்கள், மறைபொருளை வைத்து குழந்தைகளிடம் சுவாராசியத்தை உண்டு செய்கிறவர்கள் ஆசிரியர்கள், அழகானத் தடையை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள், பாடங்களை திறப்பவர் அல்ல, பாடங்களை திறக்கச் செய்பவரே ஆசிரியர். 5 அல்லது 10 நிமிடங்களுக்கு மேல் ஆசிரியர் வகுப்பில் பேசக் கூடாது. குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்துபவராக ஆசிரியர் இருக்கவேண்டும். பெற்றோரின் பங்கு: குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்கும் இன்றியமையாததாகும். குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை பெற்றோரும் உருவாக்க வேண்டும். குழந்தைகள் பள்ளியில் நடந்ததை வீட்டில் வந்து கூறும் போது அதை காது கொடுத்து கேட்க வேண்டும். மேலும் குழந்தைகள் தான் கண்டுபிடித்ததாக கூறுவதை ஆச்சரியத்துடன் கேட்டு பாராட்ட வேண்டும். அவை நமக்குத் தெரிந்திருந்தாலும் கூட குழந்தைகளுக்கு அவை புதிதானவை. எனவே அவற்றை கேட்க வேண்டும். அவர்களுக்கு நூல்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்கள் புத்தகங்களி்ல் வரும் இடங்களோ, செயல்பாடுகளைச் சார்ந்த இடங்களோ அருகில் இருந்தால் அவர்களை அங்கே கூட்டிச் செல்ல வேண்டும். தற்கால நடைமுறையில் குழந்தைகளை கைப்பேசி போன்ற கருவிகளிலிருந்து காப்பாற்றும் ஒரே அணுகுமுறை கதைகள் மட்டுமே ஆகும். எனவே குழந்தைகளிடையே சிறு வயதிலிருந்தே கதைகளைக் கேட்கவும், புத்தகங்களை வாசிக்கவும் பழக்க வேண்டும். பெற்றோரும், ஆசிரியர்களும் இணைப்புப் புள்ளியாக இருந்து குழந்தைகளின் சிந்தனைத்திறனை மேம்படுத்த வேண்டும். கல்விமுறை: பாடத்தின் கருவை நடத்துவதோ, கல்விமுறையை செயல்படுத்துவதோ அல்ல கல்விமுறை. குழந்தைகளை கற்பதும் அவர்களின் உலகத்திற்குள் சென்று கற்பிப்பதும் தான் கல்விமுறை. குழந்தைகளுக்கு சவால்கள் பிடிக்கும். எனவே முடிந்தவரை சவால்களாக கல்வியை அவர்களிடம் செலுத்த வேண்டும். அதாவது கல்வியை குழந்தைகளே எடுத்துக் கொள்ள வேண்டும். கணிதம், அறிவியல் என அனைத்திலும் இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்தலாம். தடைகளை உருவாக்கி அவர்களை தகர்க்க சொல்ல வேண்டும். அப்போது குழந்தைகளுக்கு அது விளக்கிக் கூறாமலேயே தானாக புரியத் தொடங்கும். பாடத்திட்ட கட்டமைப்பு: ‘இந்திய நாகரிகம் பழமையானது, பெருமையானது’ என்று இரண்டாம் வகுப்பு குழந்தைகளிடம் சொல்லும் போது அவை ஒன்றுமே அவர்களுக்கு புரியாது. எத்தனை முயற்சி செய்தாலும் அதை அவர்களிடம் புரிய வைக்க முடியாது. எனவே பாடத் திட்டத்தை வைப்பவர்கள் குழந்தைகளின் மனநிலையையும் கவனத்தில் கொண்டு பாடத் திட்டத்தை கட்டமைக்க வேண்டும். மேலும் அப்பாடமானது கடலூரில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும், சென்னையில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். பாடம் 40 சதவீதமும் செயல்பாடுகள் 60 சதவீதமும் இருக்க வேண்டும். |
||||||||
by Lakshmi G on 23 Aug 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|