கர்நாடக மகளிர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, அரசு ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாட்டு விதிமுறையை, கர்நாடக மாநில அரசு தளர்த்திக் கொண்டது.
கடந்த 12ம் தேதி, கர்நாடக அரசு பணியாளர் நிர்வாக மேம்பாட்டு துறைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ், கர்நாடக அரசு ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து, உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன் படி, ஆண்கள் பேன்ட், சட்டை, குர்தா மட்டுமே அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ், டி சர்ட், வேஷ்டி ஆகியவை அணிந்து வரக்கூடாது. பெண்கள் சேலை மற்றும் சுடிதார் போன்ற உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து, கர்நாடக அரசு திடீரென தனது உத்தரவின் கடுமையை குறைத்து மறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
|