|
|||||
2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு - ஷீரடியில் பிரதமர் மோடி அறிவிப்பு! |
|||||
"2022-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத யாருமே இருக்கக் கூடாது, அனைவருக்கும் வீடு என்பதே எங்களின் இலக்கு,'' என ஷீரடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில், சாய்பாபாவின் நூற்றாண்டு சமாதி தின விழா கொண்டாடப் படுகிறது. பிரதமர் மோடி, ஷீரடிக்கு சென்று அங்குள்ள சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்ததுடன், சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பிரதமர் பேசியதாவது: நாட்டை, இதற்கு முன் ஆட்சி செய்த, அரசு, ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. வறுமையை ஒழிக்கவும், தீவிரமான நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலன் தான் முக்கியம், என்ற எண்ணத்தில் செயல்பட்டனர். மக்கள் நலப்பணிகளை விரைந்து செயல்படுத்துவது, வளர்ச்சிப் பணிகளை அக்கறையுடன் செய்வது ஆகியவை தான், பா.ஜ., தலைமையிலான, தற்போதைய மத்திய அரசின் நோக்கம் .மஹாராஷ்டிரா மண், பல சமூக சீர்திருத்தவாதிகளை நாட்டுக்கு வழங்கி உள்ளது. இவர்களால், நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது சிலர், அரசியல் ஆதாயத்துக்காக சமூகத்தை பிளவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு, நான்கு ஆண்டுகளாக, முறையான குடியிருப்புகளைக் கட்டிக் கொடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களிலும் இதுபோல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், துரதிர்ஷ்டவசமாக, ஏழைகளின் நிலையை உயர்த்துவதற்குப் பதிலாக, ஒரு குடும்பத்தின் பெருமையை உயர்த்துவதையே, குறிக்கோளாக வைத்து செயல்பட்டனர். அவர்களின் முக்கிய இலக்கு, ஓட்டு வங்கி தான்.எங்கள் இலக்கு, 2022ம் ஆண்டில், நாட்டின், 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது, வீடு இல்லாத ஒருவரும் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்குவது தான். ஏழைகளின் நலன் மட்டுமே, இப்போதுள்ள அரசின் முக்கிய நோக்கம்.கடந்த, ஆட்சியில், ஏழைகளுக்காக 4 ஆண்டுகளில், 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், பாரதீயஜனதா ஆட்சிக்கு வந்தபின், 4 ஆண்டுகளில், 1.25 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். |
|||||
by Mani Bharathi on 20 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|