பொது மக்களுக்கு, போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடிகர் அஜீத், புனேயிலிருந்து சென்னை வரை தனது பைக்கிலேயே பயணம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக புனே நகரில் நடைபெற்ற வீரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜீத், படப்பிடிப்பு முடிந்ததும் கடந்த 15ந் தேதி தனது நண்பர்கள் சிலருடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு பயணமானார். வருகிற வழியில் பெங்களூரில் 3 மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின்பு கிளம்பினார். இப்படியாக புனே-சென்னை இடையேயான 1100 கிலோ மீட்டரை 16 மணி நேரப் பயணத்தில் கடந்தார். இந்த பயணம் பற்றி அஜீத் கூறியிருப்பதாவது: ஒரு நாட்டின் போக்குவரத்து கலாச்சாரத்தை பார்த்து அந்த நாடு எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று சொல்லிவிட முடியும். நம் நாட்டில் போக்குவரத்து கலாச்சாரம் குறைவு. இருசக்கர வாகனம் ஓட்டுகிறவர்கள் பாதுகாப்பற்ற முறையிலேயே ஓட்டுகிறார்கள். குறைந்த பட்சம் ஹெல்மெட் கூட அணிவதில்லை. அதற்கு விழிப்பூட்டும் விதமாகத்தான் இந்த பயணத்தை மேற்கொண்டேன். 1100 கிலோ மீட்டரை எந்த சிறு விபத்தும் நடக்காமல் கடந்ததற்கு காரணம் நான் மட்டுமல்ல நான் செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தான். குறிப்பாக ஹெல்மெட். இதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என நடிகர் அஜீத் கூறியுள்ளார்.
|